எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான ஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று லான்ச் செய்யப்பட்டன.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான ஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று லான்ச் செய்யப்பட்டன. அதில் உள்ள வசதிகள், விலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெங்களூரு நகரை மையமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த நிறுவனத்தின் ஏத்தர் 340, ஏத்தர் 450 ஆகிய 2 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று லான்ச் செய்யப்பட்டுள்ளன.

ஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், லித்தியான் இயான் பேட்டரிதான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும். எனவே பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டிய பிரச்னை இருக்காது. இந்த பேட்டரியில், ஒரு மணி நேரத்தில், 80 சதவீத சார்ஜை நிரப்பி கொள்ளலாம்.

ஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், BLDC (brushless direct current) மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 பிஎஸ்) பவரையும், 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 பிஎஸ்) பவரையும் வழங்கும்.

அதே நேரத்தில் 340 ஸ்கூட்டர் 20 என்எம் டார்க் திறனையும், 450 ஸ்கூட்டர் 20.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த 2 ஸ்கூட்டர்களின் டார்க் திறனானது, கேடிஎம் 200 டியூக், பஜாஜ் பல்சர் 220 ஆகிய பைக்குகளின் டார்க் திறனை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 340 ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். அதே நேரத்தில் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்.

ஏத்தர் 340 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர். மறுபக்கம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர். இதன்மூலம் இந்தியாவின் மிக வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஏத்தர் 450 இருக்கும்.

ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டலாம். ஆனால் ஏத்தர் 350 ஸ்கூட்டர் இதனை 5.1 வினாடிகளில்தான் செய்யும்.

ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது. இந்தியாவில் கோடை காலங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், பேட்டரி அதிக சூடு ஆகாமல் இருப்பதற்காக கூலிங் பேன் வழங்கப்பட்டுள்ளது.

2 ஸ்கூட்டர்களிலும் 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ப்ரண்ட் மற்றும் ரியரில் டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மற்றுமொரு ஹைலைட் என்னவென்றால், 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்தான். இதுதவிர ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ், சேட்டிலைட் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பார்க்கிங் அஸிஸ்ட் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளும் உள்ளன.

ஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.09 லட்ச ரூபாய். ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.24 லட்ச ரூபாய். இவை இரண்டும் ஆன் ரோடு விலையாகும். எனவே ரிஜிஸ்ட்ரேஷன், இன்சூரன்ஸ், ஸ்மார்டு கார்டு ஆகிய அனைத்தும் இந்த விலைக்குள்ளே அடங்கி விடும்.

2 ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில்தான் உள்ளன. ஆனால் 450 ஸ்கூட்டரின் சக்கரத்தில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களின் பேட்டரிகளுக்கு 3 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

2 ஸ்கூட்டர்களிலும் இன்பில்ட் ரிவர்ஸ் அஸிஸ்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோட்டாரை பயன்படுத்தி ஸ்கூட்டர்களை பின்னோக்கி இயக்க முடியும். ஆனால் பின்னோக்கி இயக்கும்போது, மணிக்கு 5 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மட்டுமே 2 ஸ்கூட்டர்களும் இயங்கும்.

இந்தியாவில் போதிய அளவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இல்லாத நிலையில், இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை காரணமாக, இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தொடக்கத்தில் பெங்களூரு நகரில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக எஞ்சிய நகரங்களிலும் விற்பனை தொடங்கப்படும்.

340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்களை, தங்கள் வெப்சைட் மூலமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்து கொண்டு வருகிறது. ஆனால் ஆகஸ்ட் மாதம்தான் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாங்கும் வாடிக்கையாளர்கள், வீட்டிலேயே இன்ஸ்டால் செய்யக்கூடிய சார்ஜிங் ஸ்டேஷன்களையும் பெறுவார்கள். ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் முன்பாக, இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்ஸ்டால் செய்யப்படும்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த நண்பர்களான தருண் மெஹ்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர்தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








