போட்டியாளர்களை குலை நடுங்க வைத்த பஜாஜ்.. கம்பீரமாக மறு அவதாரம் எடுக்கிறது சீட்டாக் ஸ்கூட்டர்..
பஜாஜ் நிறுவனத்தின் சீட்டாக் ஸ்கூட்டர் மறு அவதாரம் எடுக்க உள்ளது. ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு இது கடும் போட்டியை வழங்கும் என்பதால், போட்டியாளர்கள் குலை நடுங்கி போயுள்ளனர்.
பஜாஜ் நிறுவனத்தின் சீட்டாக் ஸ்கூட்டர் மறு அவதாரம் எடுக்க உள்ளது. ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு இது கடும் போட்டியை வழங்கும் என்பதால், போட்டியாளர்கள் குலை நடுங்கி போயுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீட்டாக் ஸ்கூட்டரின் மறு அவதாரம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரு காலத்தில் இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்டில் கோலோச்சிய நிறுவனம் பஜாஜ். ஸ்கூட்டர் செக்மெண்டின் 50 சதவீத மார்க்கெட் ஷேரை இந்தியாவின் பஜாஜ் நிறுவனமே கைவசம் வைத்திருந்தது.

அந்த சமயத்தில் பஜாஜ் நிறுவனத்தின் சீட்டாக் ஸ்கூட்டர் விற்பனை சக்கை போடு போட்டது. இந்திய மக்களின் விருப்பமான ஸ்கூட்டர் என்றால், அது பஜாஜ் நிறுவனத்தின் சீட்டாக்தான். கடந்த 1972ம் ஆண்டு முதல் சீட்டாக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2006ம் ஆண்டுதான் சீட்டாக் ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்தியது. இடைப்பட்ட ஆண்டுகளில், குறிப்பாக 1980, 90களில் இந்திய சாலைகள் முழுவதும், பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டர்கள்தான் நிரம்பியிருந்தன.

மிகவும் மலிவான விலையில் கிடைத்த தரமான ஸ்கூட்டர் பஜாஜ் சீட்டாக். ஹமாரா பஜாஜ் (நம்ம பஜாஜ்) என மக்கள் அன்போடு இதனை அழைத்தனர். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. 50 சதவீதமாக இருந்த பஜாஜ் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் இன்று வெறும் 15 சதவீதமாக சரிந்து விட்டது.

ஸ்கூட்டர் செக்மெண்ட் தொடர்பாக பஜாஜ் நிறுவனம் எடுத்த சில தவறான முடிவுகளே இதற்கு காரணம் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இன்று இந்திய ஸ்கூட்டர் செக்மெண்டை ஆண்டிகொண்டிருக்கும் அரசன் ஹோண்டா.

இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்றால், அது ஹோண்டா ஆக்டிவாதான். தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் பஜாஜ் நிறுவனம் களமிறங்கியிருக்கிறது. இதற்காக தனது பழைய ஆயுதத்தை பஜாஜ் மீண்டும் கையில் எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ம் ஆண்டில், அதாவது இன்னும் சில மாதங்களில் பஜாஜ் நிறுவனம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை லான்ச் செய்ய திட்டமிட்டுள்ளது. அனேகமாக அது சீட்டாக் பிராண்டாக இருக்கலாம் என வெளியாகி வரும் தகவல்கள், போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன.

ஆம், பஜாஜ் சீட்டாக் மறு அவதாரம் எடுக்கப்போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அனேகமாக இது 125 சிசி ஸ்கூட்டராக இருக்கலாம். ஹோண்டா ஆக்டிவா, பியாஜியோ வெஸ்பா, அப்ரிலா எஸ்ஆர் 150 உள்ளிட்ட ஸ்கூட்டர்களின் டாப் வேரியண்ட்களுக்கு இது கடும் போட்டியை வழங்கும்.

பஜாஜ் இத்துடன் நிற்க போவதில்லை. சீட்டாக் ஸ்கூட்டரின் சீட்டாக் சிக் என்ற எலக்ட்ரிக் வெர்ஷனையும் லான்ச் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிரீமியம் ஸ்கூட்டர் வாங்குபவர்களை குறிவைத்து இந்த முடிவை பஜாஜ் நிறுவனம் எடுத்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரில், சௌகரியமான ரைடிங் பொஷிசன், இருக்கைக்கு அடியில் விசாலமான இட வசதி, கால்களை வைப்பதற்கான விசாலமான இட வசதி, ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், சிபிஎஸ் பிரேக், பெரிய எரிபொருள் டேங்க், ஓவல் வடிவ ஹெட்லேம்ப் உள்ளிட்டவையும் பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரில் இடம்பெறும். இதில், 125 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் 9-10 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இவை அனைத்தும் முதற்கட்டமாக வெளியாகியுள்ள தகவல்கள் மட்டுமே. இதன் விலை 70 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என பஜாஜ் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சில வாகனங்களின் உற்பத்தியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் நிறுத்தி விடுகின்றன. ஆனால் அந்த வாகனங்களை ரீ லான்ச் செய்ய வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு வாகனம்தான் சீட்டாக்.

சீட்டாக் ஸ்கூட்டர் குறித்த எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் தற்போதே ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. இதனால் போட்டி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








