கோவா கேசினோக்களில் சூதாடுவதற்காக வடிவேலு ஸ்டைலில் பைக்குகளை திருடிய 20 வயது வாலிபர் சிக்கினார்..
கோவா கேசினோக்களில் சூதாடுவதற்காக, வடிவேலு ஸ்டைலில் பைக்குகளை திருடி வந்த 20 வயது வாலிபரை போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
கோவா கேசினோக்களில் சூதாடுவதற்காக, வடிவேலு ஸ்டைலில் பைக்குகளை திருடி வந்த 20 வயது வாலிபரை போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ள பரபரப்பு தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மாநகர பகுதிகளில், இரு சக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்கில், மஞ்சுநாத் ஹெக்டே என்ற பிரபல கொள்ளையனை கேஜி ஹள்ளி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட பைக் கொள்ளையன் மஞ்சுநாத் ஹெக்டேவுக்கு வெறும் 20 வயது மட்டுமே ஆகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இவர் பெங்களூரு சுங்கதகட்டே பகுதியை சேர்ந்தவர். ஆனால் அதிர்ஷ்டம் கை கொடுத்ததால், இந்த வழக்கில் மஞ்சுநாத் ஹெக்டே உடனடியாக ஜாமீன் பெற்று விட்டார்.

ஆனால் அதன்பின்பும் மஞ்சுநாத் ஹெக்டே திருந்தவில்லை. மீண்டும் பைக்குகளை கொள்ளையடிக்க தொடங்கினார். ஆனால் மற்ற கொள்ளையர்களை போல் அல்லாமல் மிகவும் நூதன முறையில் விலை உயர்ந்த பைக்குகளை குறி வைத்து கொள்ளையடிக்க தொடங்கினார் மஞ்சுநாத் ஹெக்டே.

பைக்குகளை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்பவர்கள்தான் மஞ்சுநாத் ஹெக்டேவின் முதல் இலக்கு. இவ்வாறு விளம்பரம் செய்பவர்களை செல்போன் மூலமாக மஞ்சுநாத் ஹெக்டே தொடர்பு கொள்வார். மிகவும் நவநாகரீகமாக பேசுவார்.

பின்னர் அவர்களை நேரில் சந்திப்பார். எனவே பைக்குகளை விற்பனை செய்பவர்களுக்கு,மஞ்சுநாத் ஹெக்டே மீது அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நம்பிக்கையைதான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் மஞ்சுநாத் ஹெக்டே.

அதாவது தனியாக டெஸ்ட் ரைடு சென்று பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பைக் உரிமையாளர்களிடம் மஞ்சுநாத் ஹெக்டே முன் வைப்பார். மஞ்சுநாத் ஹெக்டே மீதான நம்பிக்கையில், பைக் உரிமையாளர்களும் அதற்கு ஒப்பு கொண்டுள்ளனர்.

அப்படி ஒப்புக்கொண்டவர்களின் பைக்குகளைதான் மஞ்சுநாத் ஹெக்டே கொள்ளையடித்துள்ளார். டெஸ்ட் ரைடு செல்வதாக கூறி செல்லும் மஞ்சுநாத் ஹெக்டே மீண்டும் திரும்பி வரவே மாட்டார். இந்த வகையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 விலை உயர்ந்த பைக்குகளை மஞ்சுநாத் ஹெக்டே கொள்ளையடித்துள்ளார்.

எனவே பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டி, பரப்பன அக்ரஹாரா, பன்னர்கட்டா உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் குவிய தொடங்கின. ஆனால் அவரை கைது செய்வது என்பது போலீசாருக்கு பெரும் சவாலான காரியமாக இருந்து வந்தது.

ஏனெனில் மஞ்சுநாத் ஹெக்டே அடிக்கடி சிம் கார்டுகளையும், செல்போன்களையும் மாற்றி கொண்டே வந்துள்ளார். ஒரு பைக்கை கொள்ளையடித்து விட்டால், அதற்கு பயன்படுத்திய சிம் கார்டை மீண்டும் உபயோகிக்க மாட்டார். அந்த சிம் கார்டை அழித்து விடுவார்.

இதனால் மஞ்சுநாத் ஹெக்டேவை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறினர். இந்த சூழலில் மஞ்சுநாத் ஹெக்டே பயன்படுத்தி வந்த ஒரு செல்போனின் ஐஎம்இஐ (IMEI) எண் போலீசாருக்கு கிடைத்தது. அதனை அடிப்படையாக வைத்து, மஞ்சுநாத் ஹெக்டேவின் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர்.

அத்துடன் அவரை அதிரடியாக கைதும் செய்து விட்டனர். எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார்தான் அவரை கைது செய்துள்ளனர். மஞ்சுநாத் ஹெக்டேவிடம் இருந்து கேடிஎம் டியூக், புல்லட் உள்பட மொத்தம் 12 லட்ச ரூபாய் மதிப்பிலான 6 விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக்குகளை கொள்ளையடித்ததன் மூலமாக கிடைத்த பணத்தில், மஞ்சுநாத் ஹெக்டே ஆடம்பர வாழ்க்கை நடத்தியதாக Bangalore Mirror செய்தி வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சி, சினிமா ஆகியவற்றை பார்த்துதான் மஞ்சுநாத் ஹெக்டே கொள்ளையனாக உருவெடுத்துள்ளார்.

ஒரு பைக்கை திருடி விற்பனை செய்து விட்டால், உடனடியாக கோவா சென்று விடுவது மஞ்சுநாத் ஹெக்டேவின் வழக்கம். பின்னர் அந்த பணத்தை கொண்டு கோவாவில் உள்ள கேசினோக்களில் சூதாடுவார். ஸ்டார் ஹோட்டல்களில்தான் தங்குவார்.

அந்த பணம் கறைந்ததும் பெங்களூரு வந்து விலை உயர்ந்த ஏதேனும் ஒரு பைக்கை கொள்ளையடித்து விட்டு மீண்டும் கோவா சென்று விடுவார். பின்னர் பழையபடியே கேசினோ, சூதாட்டம், ஸ்டார் ஹோட்டல் என சொகுசான ஆடம்பர வாழ்க்கைதான்.

இத்தனைக்கும் மஞ்சுநாத் ஹெக்டேவின் தந்தை சாதாரண கூலி வேலைதான் செய்து வருகிறார். தனது மகன் கொள்ளையன் என்பது அவருக்கும் தெரியாது. மற்றவர்களை போல அவருக்கும் தற்போதுதான் மஞ்சுநாத் ஹெக்டேவின் கைவரிசைகள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

குண்டக்க... மண்டக்க.. படத்தில் வடிவேலு ஆட்டோவை டெஸ்ட் ரைடு கேட்டு கொள்ளையடிப்பது போல், விலை உயர்ந்த பைக்குகளை எல்லாம் திருடி சென்றுள்ளார் மஞ்சுநாத் ஹெக்டெ. ஆனால் மஞ்சுநாத் ஹெக்டேவுக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்ததால், அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். அந்த அதிர்ஷ்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட பைக்குகளை நல்ல தொகைக்குதான் மஞ்சுநாத் ஹெக்டே விற்பனை செய்துள்ளார். பைக்குகளை வாங்கியவர்களுக்கும் கூட அவர் மீது சந்தேகம் எழவில்லை. நாம் வாங்கப்போவது கொள்ளையடிக்கப்பட்ட பைக் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அந்த அளவிற்கு அனைவரையும் மஞ்சுநாத் ஹெக்டே நம்ப வைத்துள்ளார். எனவே செகண்ட் ஹேண்டில் பைக் வாங்கும்போது சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் கொள்ளையடிக்கப்பட்ட பைக்குகளை உங்கள் தலையில் கட்டி விடக்கூடிய அபாயம் உள்ளது.
கேடிஎம் 790 டியூக் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications