சென்னை சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்... பெற்றோர்களே உஷார்...
சென்னையை சேர்ந்த சிறுவனுக்கு வினோத தண்டனை ஒன்றை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனி உங்கள் மகன் இந்த தவறை செய்தால் நீங்களும் கூட தண்டிக்கப்படலாம்.
சென்னையை சேர்ந்த சிறுவனுக்கு வினோத தண்டனை ஒன்றை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனி உங்கள் மகன் இந்த தவறை செய்தால் நீங்களும் கூட தண்டிக்கப்படலாம்.

உலக அளவில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்திய அளவில் பார்த்தால், தமிழகத்தில்தான் அதிகப்படியான சாலை விபத்துக்கள் அரங்கேறுகின்றன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது என போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர பலர் லைசென்ஸ் எடுப்பதே இல்லை. இந்தியாவில் லைசென்ஸ் எடுப்பது என்பது எளிதான ஒரு காரியம்தான். அப்படி இருந்தும் கூட பலர் லைசென்ஸ் எடுக்காமலேயே வாகனம் ஓட்டி வருகின்றனர். அத்தகைய நபர்களாலும் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டி சென்றார். அவரிடம் லைசென்ஸ் இல்லை. அப்போது இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில், பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதுதொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது போக்குவரத்து நெருக்கடி குறித்த பிரச்னைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான தண்டனை ஒன்றை நீதிமன்றம் வழங்கியது.

போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. சம்பந்தப்பட்ட சிறுவன் 2 நாட்களுக்கு இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அச்சிறுவன் ஈடுபட்டார். மிகவும் பரபரப்பான சாலைகளில், அந்த சிறுவன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை நீங்கள் கீழே காணலாம்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''உரிய வயதை எட்டாத சிறுவர்களை வாகனம் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. லைசென்ஸ் பெற்ற பிறகே வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலமாக விபத்துக்களை கட்டுப்படுத்தலாம்'' என்றனர்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய இந்த வித்தியாசமான தண்டனைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உரிய வயதை எட்டும் முன்பே வாகனம் இயக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே உள்ளது.

இதுவும் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெற்றோர்களின் அனுமதியுடன்தான் பல சிறுவர்கள் வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகர போலீசார் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இதில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு அவ்வளவாக அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக சாலைகளில் ரேஸ் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதவிர வீலிங் போன்ற அபாயகரமான ஸ்டண்ட்களிலும் சிறுவர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் மீதும் போலீசார் போதிய நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாக தெரியவில்லை.
More from DriveSpark
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








