40 சூப்பர் பைக்குகளை திடீரென பறிமுதல் செய்த போலீசார் மீது பேஸ்புக் லைவ்வில் இளைஞர்கள் பகீர் புகார்..
40 சூப்பர் பைக்குகளை திடீரென பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் மீது பேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக இளைஞர்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.
40 சூப்பர் பைக்குகளை திடீரென பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் மீது பேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக இளைஞர்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தா பகுதியில், வார இறுதி நாட்களில், சட்டத்திற்கு புறம்பாக சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாகவும், வீலிங், ஸ்பீடிங் என ஸ்டண்ட்களை செய்வதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்படிப்பட்ட பைக் ரேஸர்களை பிடிக்க போலீசார் அதிரடியாக முடிவு செய்தனர்.

சட்டத்தை மீறுகிற பைக் ரேஸர்களை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பர்தமான் என்ற பகுதிக்கு அருகே உள்ள என்எச்-2ல், அனுமதி இல்லாமல் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்டில் சிலர் ஈடுபடுவதாக, கடந்த வார வீக் எண்டில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. இதன்பின் பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த, சுமார் 40 பைக் ரேஸர்களை போலீசார் பிடித்தனர். அத்துடன் அவர்களின் பைக்குகளையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளில், கவாஸ்கி Z250, கவாஸ்கி நின்ஜா 650, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஆகிய சில சூப்பர் பைக்குகளும் அடக்கம். இதன்பின் அந்த பைக்குகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் போலீசார் கொண்டு வந்தனர்.

பர்தமான் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், முறைகேடான ரேஸ் மற்றும் ஸ்டண்ட் போன்றவற்றில் பைக் ரேஸர்கள் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வார இறுதி நாட்களில், ரேஸ் நடைபெறும் இடமாக பர்தமான் உள்ளது.

எனவேதான் போலீசார் அங்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்து, சுமார் 40 பைக்குகளை பறிமுதல் செய்தனர். ஆனால் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், இது போன்று முறைகேடாக பைக் ரேஸ் நடைபெறுவது என்பது வாடிக்கையாகி விட்டது.

எனவே வரும் நாட்களில், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் அதிரடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அம்மாநில போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை மீறும் பைக் ரேஸர்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட பகுதிகளின் சிசிடிவி பூட்டேஜ்களையும் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக 40 பைக்குகளை பறிமுதல் செய்த பின்பும், பர்தமானில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலத்தின் இதர பகுதிகளில் நடைபெற்ற மீட் அப்பில் கலந்து கொள்வதற்காக, அவ்வழியாக சென்று கொண்டிருந்த மேலும் சில இரு சக்கர வாகன ஓட்டிகளையும் போலீசார் பிடித்தனர்.

அவர்களுக்கும் போலீசார் திடீரென அபராதம் விதித்தனர். அப்படி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவரான ஸ்னேகாஸிஸ் மோண்டல் என்பவர், உடனடியாக பேஸ்புக் லைவ் மூலமாக போலீசார் மீது புகார் தெரிவித்தார்.

அவர் குழுவில் 32 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 70-80 என்ற அளவான வேகத்தில்தான் பயணித்து கொண்டிருந்ததாக ஸ்னேகாஸிஸ் மோண்டல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அவர்கள் அணிந்து இருந்தார்களாம்.

ஆனால் அவரது குழுவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்ததுடன், அவர்களின் ஐடி கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றையும் போலீசார் வாங்கி கொண்டதாக ஸ்னேகாஸிஸ் மோண்டல் குற்றஞ்சாட்டினார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஒழுங்காக பயணித்து கொண்டிருந்தவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாருக்கு போலீசார் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்பது தெரியவில்லை.

இந்தியாவில் சூப்பர் பைக்குகள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறாகவும், முறைகேடாகவும் ரேஸ் மற்றும் ஸ்டண்டில் ஈடுபடுபவர்களை பிடிப்பது எல்லாம் ஓகே.

ஆனால் ஹை பெர்பார்மென்ஸ் பைக்குகளை பார்த்து விட்டாலே, போலீசார் உடனடியாக அதனை மறித்து நிறுத்திவிடும் வழக்கம் இருந்து வருகிறது. ரைடிங் ஜாக்கெட் அணிந்து கொண்டு சாலையில் வருபவர்களை பார்த்தாலே, அவர் அதிவேகத்தில்தான் செல்கிறார் என சில போலீசார் கருதி விடுகின்றனர்.

அத்துடன் குரூப் பைக் ரைடிங்கை, முறைகேடான ரேஸிங் மற்றும் ஸ்டண்டுகளுடன் போலீசார் ஒப்பிட்டு விடுகின்றனர். எனவே சூப்பர் பைக் வைத்திருப்பவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
Source:Snehasish Mondal
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications