பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!
சென்னையை சேர்ந்த ஒருவர் வாங்கிய புதிய பைக்கில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் பைக் வாங்கிய ஷோரூம் முன்பே எரித்தார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஒருவர் வாங்கிய புதிய பைக்கில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் பைக் வாங்கிய ஷோரூம் முன்பே எரித்தார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நியூஸ் 7 வெளியிட்ட செய்தியின் படி சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள எஸ்பிஎம் டிவிஎஸ் என்ற டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் டிவிஎஸ் விக்டர் பைக்கை வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய நாள் முதல் பைக்கில் பிரேக் பிடிக்காமல் போவது, இன்டிகேட்டர் சரியாக வேலை செய்யாமல் போவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதையடுத்து அவர் அந்த பைக்கை அந்த டீலரிடமே கொண்டு சென்று பிரச்னைகள் குறித்து கூறியுள்ளார். அவர்களும் அதை சரி செய்வதாக கூறி பைக்கை சரி செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் அவருக்கு மீண்டும் அந்த பிரச்னை சில தினங்களில் வந்து விடுகிறது. சர்வீஸ் சென்டரில் அந்த பிரச்னையை என்னதான் சரி செய்து கொடுத்தாலும் அந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவேயில்லை.

கடந்த 6 மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை அவர் சர்வீஸ் சென்டருக்கு பைக்கை கொண்டு செல்லும் நிலை வந்தது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இதற்கிடையில் அவர் சர்வீஸ் சென்டருக்கு செல்லும் போது எல்லாம் அங்கிருப்பவர்கள் அவரை கிண்டல் செய்யும் தொனியிலேயே நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரு முடிவுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சர்வீஸ் சென்டருக்கு அவர் சென்றுள்ளார். அப்பொழுதும் அவரை வழக்கம் போல் அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பைக்கை ஷோரூமிற்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஒரு பெரிய கல்லை கொண்டு அந்த பைக்கை தாக்க ஆரம்பித்தார்.

அதன் பின்னும் வேகம் அடங்காமல் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்து அதை அந்த பைக்கிலேயே ஊற்றி நெருப்பை ஊற்றி பற்ற வைத்து விட்டார்.

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. சுற்றி இருந்த பொதுமக்கள் எல்லாம் அப்பகுதியில் கூடினர். இதை கண்ட டிவிஎஸ் ஷோரூம் காரர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்குள் அந்த பைக் முழுவதும் தீயில் கருகியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பைக்கை கல்லால் உடைக்க முயற்சிப்பதையும், தீ வைப்பதையும் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவுடன் வெளியான செய்தியை கீழே காணுங்கள்.
தமிழகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. சில நேரங்களில் தயாரிப்பு ஆலைகளில செய்யப்படும் சில பிழைகளால் சில வாகனங்களில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறான வாகனங்களை உடனடியாக மாற்றிக்கொடுக்க வேண்டியது டீலர்களது பொறுப்பு. பைக் தயாரிப்பு நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு வேலை கோபி இந்த முறையும் பொறுமையாக பைக்க எடுத்து சென்று போயிருந்தால், போய் கொண்டிருக்கும் போதே பிரேக் பிடிக்காமல் போய் விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதனால் இது போன்ற சம்பவங்களில் சர்வீஸ் சென்டர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
எங்களது டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் கோபியின் கோபத்திற்கு முக்கிய காரணமே சர்வீஸ் சென்டர் அல்லது ஷோரூமில் இருந்தவர்களின் நடத்தைதான் என அவரே தெளிவாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் டீலர்கள் வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கும் வரை ஒரு விதமாகவும், வாகனம் வாங்கிய பின்பு வேறு ஒரு விதமாகவும் நடந்து கொள்கின்றனர். இது அந்த டீலருக்கு மட்டும் அல்லது டிவிஎஸ் நிறுவனத்திற்கே கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்து விடும்.


Click it and Unblock the Notifications