நெல்லை பெட்ரோல் பங்க்கில் தீப்பற்றி எரிந்த வாலிபர்.. பைக்கில் தீ பிடித்ததால் விபரீதம்.. பகீர் வீடியோ
நெல்லை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்பும்போது, பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. பைக்கில் அமர்ந்திருந்த வாலிபர் மீதும் தீ பரவியது.
நெல்லை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்பும்போது, பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. பைக்கில் அமர்ந்திருந்த வாலிபர் மீதும் தீ பரவியது. அதிர்ச்சிகரமான இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெல்லை மாவட்டம் முருகன்குறிச்சி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆல்வின் என்ற இளைஞர், இரு சக்கர வாகனத்தில் இந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். பின்னர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.

இதன்படி பங்க் ஊழியர் பெட்ரோலை நிரப்பி முடித்தார். இதன்பின் புறப்பட ஆயத்தமான ஆல்வின், இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, திடீரென தீ பற்றியது. இரு சக்கர வாகனத்தின் டேங்க் பகுதியில் பற்றிய தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஆல்வின் மீதும் பரவியது.

இதனால் இரு சக்கர வாகனத்தை அப்படியே போட்டு விட்டு ஆல்வின் கீழே இறங்கி ஓடினார். அவர் அலறியடித்து கொண்டு ஓடியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, தீயணைப்பான் உதவியுடன் உடனடியாக தீயை அணைத்து விட்டனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஆல்வினுக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

திடீரென எப்படி தீ பற்றியது? என்பதற்கான உறுதியான காரணம் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. ஆனால் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரம்பும்போது, டேங்க் நிரம்பிவிட்டது. அப்போது பெட்ரோல் வெளியே வழிந்ததில், ஆல்வினின் ஆடைகளும் நனைந்து விட்டன.

அவர் அப்படியே இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோதுதான் தீ பற்றியுள்ளது. அத்துடன் ஆல்வின் மீதும் தீ பரவி விட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து ஏற்பட்ட அதிர்ச்சிகரமான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஆல்வின் மீது தீப்பற்றியதற்கு என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் உறுதியான காரணம் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications