இந்தியாவை சீண்டாதீங்க Mr.டிரம்ப்! வர்த்தக போரில் பைக் வாயிலாக அமெரிக்காவுக்கு ரிவென்ச்!
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை உயர்த்தி, டிரம்பிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை உயர்த்தி, டொனால்டு டிரம்பிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. இந்தியாவில் உள்ள ஹார்லி டேவிட்சன் ஆர்வலர்கள் பலர், அதனை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு, இந்திய அரசு 75 சதவீதம் வரி விதித்து வந்தது.

75 சதவீத சுங்க வரி வசூலிக்கப்பட்டு வந்ததால், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே சுங்க வரியை குறைக்க வேண்டும் என இந்திய அரசிடம், அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனை ஏற்ற இந்திய அரசு, ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான சுங்க வரியை 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்தது. எனினும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரியை இன்னும் குறைக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் மூண்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான வரியை, டொனால்டு டிரம்ப் திடீரென உயர்த்தினார்.

அதாவது இந்தியாவில் இருந்து செல்லும் இரும்பு பொருட்களுக்கு 25 சதவீதமும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. அமெரிக்க அரசு கடந்த மார்ச் மாதத்தில் இந்ந நடவடிக்கையை மேற்கொண்டது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன், கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில், டொனால்ட் டிரம்ப், இந்தியாவை கடுமையாக தாக்கி பேசினார். ஹார்லி டேவிட்சன் பைக்குடன் சேர்த்து இதர அமெரிக்க பொருட்களுக்கும் இந்தியா அதிகப்படியான சுங்க வரியை விதிப்பதாக அவர் கூறினார்.

முன்னதாகவும் கூட பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல், ஓரிரு முறைகள் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இந்திய அரசு தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களுக்கான சுங்க வரியை இந்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது.

இதில், 800 சிசிக்கும் அதிகமான மோட்டர் சைக்கிள்களும் அடங்கும். இனிமேல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 800 சிசிக்கும் அதிகமான இன்ஜின் கெபாசிட்டி கொண்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களுக்கும் 50 சதவீத வரி விதிக்கப்படும்.

இந்தியா ஒரு சில சலுகைகளை வழங்கி வந்ததால், அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 800 சிசிக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு குறைவான வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தியா சலுகைகளை நிறுத்தி கொள்ள முடிவு செய்துள்ளதால், 50 சதவீத வரி விதிக்கப்படும்.

800 சிசிக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுடன் சேர்த்து, பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆப்பிள் என அமெரிக்காவின் 30 பொருட்களுக்கு, இந்தியா சலுகைகளை நிறுத்தி கொண்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட வரி விதிப்பு முறைகள் வரும் 21ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பில் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தி கொள்வது தொடர்பான தனது முடிவை, உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organisation) இந்தியா தெரிவித்து விட்டது. இதன்மூலம் இந்திய அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும், இப்படி வரி விதிப்பில் பதிலடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா இதுவரை மேற்கொண்டது இல்லை. முதல் முறையாக தற்போதுதான் இந்தியா இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதுவும் அமெரிக்காவுக்கு எதிராக.


Click it and Unblock the Notifications