ஹோண்டாவிடம் இருந்து முதலிட அரியணையை கைப்பற்ற ஹீரோ வகுத்த ரகசிய திட்டங்கள் வெளியே கசிந்தன..
ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் முதலிடம் வகித்து வரும் ஹோண்டாவை பின்னுக்கு தள்ளி அரியணையை கைப்பற்ற ஹீரோ நிறுவனம் முட்டி மோதி வருகிறது.
ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் முதலிடம் வகித்து வரும் ஹோண்டாவை பின்னுக்கு தள்ளி அரியணையை கைப்பற்ற ஹீரோ நிறுவனம் முட்டி மோதி வருகிறது. இதற்காக ஹீரோ நிறுவனம் வகுத்துள்ள ரகசிய திட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன.

உலகின் முதன்மையான இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹீரோ. உலகில் வேறு எந்த இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமும் படைக்காத புதிய சாதனை ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஹீரோ நிறுவனம் சமீபத்தில் நிகழ்த்தி காட்டி அனைவரையும் மிரள செய்தது.

அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 இரு சக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்தது. ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களை உலகின் வேறு எந்த நிறுவனமும் இதுவரை விற்பனை செய்தது கிடையாது.

வரலாற்றில் முதல் முறையாக ஹீரோ நிறுவனம்தான் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. என்றாலும் அனைவரையும் மிரள செய்யும் ஹீரோ நிறுவனத்தையே ஒரு ஸ்கூட்டர் தனி ஆளாக மிரள செய்து வருகிறது.

ஹோண்டா ஆக்டிவாதான் அந்த ஸ்கூட்டர். இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவாதான் தன் கைவசம் வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனமும் ஹோண்டா ஆக்டிவாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இரு சக்கர வாகனங்களின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியலில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள், ஹோண்டா ஆக்டிவாதான் முதலிடத்தில் இருந்து வந்தது. இத்தனைக்கும் அது ஸ்கூட்டர்தான்.

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்களினால் கூட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கையை எட்ட முடியாத நிலையே இருந்து வந்தது. ஒரு வழியாக கடந்த செப்டம்பர் மாதம்தான் ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கையை ஹீரோ ஸ்பிளெண்டர் கடந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 2,85,508 ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிள்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்தது. அதே சமயம் ஹோண்டா நிறுவனமோ 2,84,809 என்ற எண்ணிக்கையில்தான் ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது.

இதன்மூலம்தான் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்தது. ஆனால் ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவுதான் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஏறத்தாழ 60 சதவீத மார்க்கெட் ஷேரை ஹோண்டா நிறுவனமே தன் கைவசம் வைத்துள்ளது. இதற்கு ஆக்டிவா ஸ்கூட்டர்தான் மிக முக்கிய காரணம். அதே நேரத்தில் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹீரோ நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 10.42 சதவீதம்தான்.

எனவே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளினால் மட்டுமே ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் அதிகப்படியான மார்க்கெட் ஷேரை கைப்பற்ற முடியும் என்ற நெருக்கடி ஹீரோ நிறுவனத்திற்கு இருந்து வருகிறது.

இதனிடையே கடந்த ஏப்ரல்-செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் ஸ்கூட்டர் செக்மெண்ட் 5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அப்படி இருந்தும் கூட ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை 12 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே ஹோண்டா ஆக்டிவாவை படிப்படியாக வீழ்த்துவதற்காகவும், ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் வளர்ச்சி அடைவதற்காகவும் சில புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ET Auto தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹீரோ நிறுவனம் சமீபத்தில் டெஸ்ட்டினி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதன்மூலம் ஹீரோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. ஏற்கனவே ப்ளஷர், டூயட் மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய 3 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த எண்ணிக்கையானது நடப்பு நிதியாண்டு முடிவதற்கு முன்பாக 5ஆக உயர்ந்துவிடும் என கூறப்படுகிறது. ஏனெனில் நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு முன்னதாக மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின் புதிய 110 சிசி ஸ்கூட்டரை ஒன்றை ஹீரோ நிறுவனம் களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய 110 சிசி ஸ்கூட்டர் அடுத்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஆகமொத்தம் அடுத்த 8-12 மாதங்களில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் டிவிஎஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் 2வது இடத்தை பிடித்து விடலாம் என ஹீரோ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

ஆம், 2வது இடம்தான். ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் தற்போது டிவிஎஸ் நிறுவனம்தான் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருப்பது ஹோண்டா. ஹோண்டாவை அரியணையில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், இரண்டாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தை முதலில் வீழ்த்தியாக வேண்டும்.

அதற்குதான் தற்போது ஹீரோ நிறுவனம் முயன்று வருகிறது. ஏனெனில் ஸ்கூட்டர் செக்மெண்ட்டின் மகுடத்தை ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து பறிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஆக்டிவாவுடன் சேர்த்து டியோ ஸ்கூட்டர்களும் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன.

ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக நகரங்களில்தான் இந்த ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. இதில், டியோ ஸ்கூட்டரானது இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications