இந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் ஏர் பேக்.. இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய தேவையில்லை!
கார்களில் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருக்கும் ஏர் பேக் போன்ற வசதி, இந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய வேண்டியதில்லை.
கார்களில் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருக்கும் ஏர் பேக் போன்ற வசதி, இந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய வேண்டியதில்லை. ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டிவைஸ் எப்படி செயல்படுகிறது? விலை என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பல லட்சம் பேர் பலத்த காயமடைவதுடன், கை, கால்களையும் இழக்கி நேரிடுகிறது. இந்தியாவில் நடைபெறும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 27 சதவீதம் பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்.

அதிக வருமானம் வரும் வளர்ச்சி அடைந்த நாடுகளை காட்டிலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. இந்தியாவில் உள்ள மொத்த வாகனங்களில், 69 சதவீத வாகனங்கள் டூவீலர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியும் பட்சத்தில், விபத்துக்களில் உயிரிழப்பதையோ அல்லது பலத்த காயம் அடைவதையோ, ஓரளவுக்கு தவிர்க்க முடியும். ஆனால் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், பலர் ஹெல்மெட் அணிவதே இல்லை.

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுகிறது எனவும், முகம் அதிகம் வியர்த்து போய்விடுகிறது எனவும் சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஹெல்மெட்டின் எடை அதிகமாக இருப்பதால், கழுத்து வலி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இப்படி ஹெல்மெட் அணியாததற்கு ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை வைத்துள்ளனர். இதை எல்லாம் விட கொடுமை என்னவென்றால், ஹெல்மெட் அணிந்திருந்தும் கூட, சிலர் விபத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது நடைமுறையில் உள்ள ஹெல்மெட்களின் தரம் மிகவும் மோசமாக இருப்பதே இதற்கு காரணம். இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக, ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மாணவர்களால், ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்களில் உள்ள ஏர் பேக்குகளை போன்று, ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' செயல்படும். கார்களில் பாதுகாப்பிற்காக ஏர் பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். விபத்து நடைபெறும் சமயங்களில், அவை உடனடியாக விரிவடைந்து, காரில் பயணிப்பவர்களை பாதுகாக்கும்.

'இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களும் ஏறக்குறைய அப்படிதான் செயல்படும். பலூன் போன்ற ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களை, டூவீலரில் பயணிக்கும்போது, கழுத்தை சுற்றி அணிந்து கொண்டால் போதும். இதன் எஞ்சிய பகுதிகளை ''காலர்'' போன்று மடித்து வைத்து கொள்ளலாம்.

விபத்து நடைபெறும் சமயங்களில், ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' ஒரு தலையணை போல விரிவடைந்து, தலையை சுற்றி படரும். இதன்மூலமாக தலை மற்றும் மூளையில் காயம் ஏற்படுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட முடியும்.

''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். விபத்து என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், இந்த சென்சார் உடனடியாக கண்டறிந்து, ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களை விரிவடைய செய்துவிடும்.

இந்தியாவில் முதல் முறையாக ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் ராஜ்வர்தன் சிங், சரங் நக்வான்ஸி, மொகித் சித்தா ஆகிய மூவரும்தான் இதனை கண்டறிந்துள்ளனர்.

இதன் விலை ஆயிரத்து 1,500 ரூபாய்க்குள்தான் இருக்கும். எனினும் இதன் விலையை இன்னும் குறைப்பதற்காகவும், பயன்படுத்துவதை மேலும் எளிதாக்குவதற்காகவும், அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதற்காகவும், ஏர் பேக் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இணை பேராசிரியர் சஞ்சய் உபாத்யாய் வழிகாட்டுதலின் படி ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் (ISRO), ''இன்ப்ளாட்டபிள் ஸ்பேஸ் ஆன்டானா'' திட்டப்பணியில், சஞ்சய் உபாத்யாய் கடந்தாண்டு ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயத்தில் மாணவர்கள் ராஜ்வர்தன் சிங், சரங் நக்வான்ஸி, மொகித் சித்தா ஆகிய மூவரும் அங்கு ''இன்டர்ன்ஷிப்'' சென்றிருந்தனர். இதை அடிப்படையாக கொண்டுதான், ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' உருவாக்கும் ஐடியா அவர்களுக்கு கிடைத்துள்ளது.

மாணவர்கள் மூவரும் ரூர்கி ஐஐடியில், பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகின்றனர். ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களை அவர்கள் பலமுறை சோதனை செய்து பார்த்து விட்டனர். அனைத்து முடிவுகளும் நல்லவிதமாக வந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








