ஐஎஸ்ஐ முத்திரை ஹெல்மெட் விவகாரம்: யூ- டர்ன் அடித்த பெங்களூர் போலீசார்!
உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வெளிநாட்டு ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவதற்கு பெங்களூர் போலீசார் தடை விதித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் பெங்களூர் போலீசார் முன்மாதிரியாக விளங்குகின்றனர். அதேபோன்று, சாலை போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுகின்றனர் என்ற நற்பெயரையும் பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரில் தரமில்லாத போலி ஹெல்மெட்டுகளை ஒழிக்கும் முயற்சியில் பெங்களூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கருத்து தெரிவித்த, பெங்களூர் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஒருவர்," வரும் பிப்ரவரி 1 முதல் ஐஎஸ்ஐ முத்திரை உடைய ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிப்போம்," என்று கூறி இருந்தார்.

பிற தரச் சான்று உடைய ஹெல்மெட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறியதும் வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சி அடைய வைத்து.

சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான DOT, ECE, SNELL உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு தரமுடைய வெளிநாட்டு ஹெல்மெட்டுகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது சமூக வலைத்தளங்களிலும், மீடியாவிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

மேலும், பெங்களூர் போக்குவரத்து போலீசாரின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஐஎஸ்ஐ முத்திரை உடைய ஹெல்மெட்டுகளை அணிந்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனால், DOT, ECE, SNELL ஆகிய பாதுகாப்பு தரச் சான்றுடைய வெளிநாட்டு ஹெல்மெட்டுகளை பயன்படுத்த முடியுமா என்ற ஐயப்பாடு எழுந்தது. இந்த பதிவுகளில் கருத்து தெரிவித்திருக்கும் பலர் உயர்தரமுடைய இறக்குமதி ஹெல்மென்ட்டுகள் குறித்த உரிய விளக்கம் அளிக்குமாறு வேண்டினர்.
ஒருவழியாக ஐஎஸ்ஐ முத்திரை தவிர்த்து, DOT, ECE மற்றும் SNELL ஆகிய பாதுகாப்பு தரமுடைய ஹெல்மெட்டுகளையும் பயன்படுத்த முடியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக பதில் அளித்துள்ளனர் பெங்களூர் போலீசார்.
ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை தவிர்த்து, வேறு எந்த பாதுகாப்பு தரமுடைய ஹெல்மெட்டுகளையும் பயன்படுத்த விடமாட்டோம் என்று கமிஷனர் கூறி இருந்த நிலையில், தற்போது யூ- டர்ன் அடித்துள்ளனர் பெங்களூர் போக்குவரத்து போலீசார். DOT, ECE மற்றும் SNELL ஹெல்மெட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மீடியா மற்றும் வாகன ஓட்டிகளின் கேள்விக் கணைகளும், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியதுமே பெங்களூர் போலீசார் யூ- டர்ன் அடித்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








