ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு 2019 செப்டம்பர் வரை முன்பதிவு முடிந்தது!
புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையில் முன்பதிவு முடிந்துவிட்டதாக மஹிந்திராவின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா தெரிவித்துள்ளார்.
ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு 2019 செப்டம்பர் வரை முன்பதிவு முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மீது வாடிக்கையாளர்களுக்கான ஈர்ப்பும், பிரியமும் அறிந்ததுதான். அதேபோன்று, பாரம்பரியம் மிக்க ஜாவா பிராண்டும் மீதும் இந்தியர்களுக்கு தனி ஈர்ப்பு உள்ளது. இந்தநிலையில், அண்மையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆன்லைனிலும், புதிதாக திறக்கப்பட்டு வரும் ஷோரூம்களிலும் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. புனே, பெங்களூர், டெல்லி, குர்கான் ஆகிய நகரங்களில் மட்டுமே ஷோரூம்கள் திறக்கப்பட்ட நிலையில், பிற முக்கிய நகரங்களிலும் ஷோரூம்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஷோரூம்கள் திறக்கப்படாத நகரங்களில் கூட ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையில் முன்பதிவு முடிந்துவிட்டதாக மஹிந்திராவின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா தெரிவித்துள்ளார்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு எதிர்பார்த்ததைவிட, வாடிக்கையாளர் மத்தியில் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு நிலவரப்படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதும், காத்திருப்பு காலம் குறித்து அவர்களுக்கு தெரிவிப்பதும் கடமையாகவும் இருக்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது. அதிலிருந்து 6 முதல் 7 மாதங்களுக்கான முன்பதிவு இப்போதே முடிந்துவிட்டது. மேலும், ஜாவா பிரியர்களுக்கு மற்றொரு ஏமாற்றம் என்னவெனில், இன்றுடன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட இருக்கிறது.

புதிய ஜாவா 42 மற்றும் 300 கிளாசிக் மாடல்களில் 293சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்தத எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 31 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சத்திலும், 300 கிளாசிக் மாடல் ரூ.1.64 லட்சத்திலும், பெராக் மாடல் ரூ.1.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ஜாவா நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications