ஜாவா பைக்குகளில் விரைவில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!
வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனையாகும் 125சிசி திறனுக்கும் மேலான மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. ஆனால், ஜாவா மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் 15ந் தேதி ஜாவா பிராண்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகமானது. ஜாவா பிராண்டில் ஜாவா 42, ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா பெராக் என்ற மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனையாகும் 125சிசி திறனுக்கும் மேலான மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. ஆனால், ஜாவா மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி அளிக்கப்படவில்லை.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 153 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. நேர் போட்டியாக கருதப்படும் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் தொடர்ந்து ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸடத்துடன் மேம்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்களில் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டது.

இதுகுறித்து பலருக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பின்சக்கரத்திற்கும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது.

ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சத்திலும், ஜாவா கிளாசிக் மாடல் ரூ.1.64 லட்சத்திலும், ஜாவா பெராக் ரூ.1.89 லட்சத்திலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல்கள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கூடுதல் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

ஜாவா 42 மற்றும் கிளாசிக் 300 மாடல்களில் 293சிசி லிக்யூடு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளில் 334சிசி எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

இரட்டை புகைப்போக்கி குழாய்கள் இந்த மோட்டார்சைக்கிள்களின் முக்கிய அம்சங்களில் ஒன்று. பாரம்பரிய பைக் பிரியர்களையும், ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தையும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் ஈர்த்துள்ளன.

தற்போது ஷோரூம்களை திறக்கும் பணியில் ஜாவா நிறுவனம் மும்முராக ஈடுபட்டுள்ளது. டிசம்பருக்குள் நாட்டின் முக்கிய நகரங்களில் டீலர்களை திறந்து விடவும் முனைப்பு காட்டி வருகிறது. தற்போது புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் ஜாவா டீலர்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் முன்பதிவும் ஏற்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications