மஹிந்திரா மோஜோ எஞ்சினுடன் வரும் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள்!
மஹிந்திரா மோஜோ எஞ்சினுடன் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாரம்பரியம் மிக்க ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் பிராண்டுகளை மஹிந்திரா நிறுவனம் 2016ம் ஆண்டில் கையகப்படுத்தியது. இது இந்திய ஜாவா மோட்டார்சைக்கிள் பிரியர்களையும், பாரம்பரிய மோட்டார்சைக்கிள் விரும்பிகளின் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தியது.

பாரம்பரிய டிசைன் அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா பிராண்டில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை களமிறக்கும் முயற்சிகளில் மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் க்ளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம்தான் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில், மஹிந்திரா மோஜோ பைக்கில் பயன்படுத்தப்படும் 300சிசி எஞ்சினை மாற்றங்கள் செய்து ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்த மஹிந்திரா திட்டமமிட்டுள்ளதாக ஆட்டோகார் புரோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஜாவா பிராண்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஜாவா மோட்டார்சைக்கிளில் மஹிந்திரா மோஜோ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் சக்தியை வெளிப்படுத்தும் திறன் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

மோஜோ எஞ்சினை பயன்படுத்துவதால், புதிய எஞ்சினுக்கான முதலீடும், உருவாக்குவதற்கான கால விரயமும் தவிர்ப்பதற்கான வாய்ப்பை மஹிந்திரா பெற்றிருக்கிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் முதல் ஜாவா மோட்டார்சைக்கிளை எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை மற்றும் சர்வீஸ் விஷயங்கள் தனி நிறுவனமாக செயல்படுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.


Click it and Unblock the Notifications








