ஆன்லைன் சவால்... அதிவேகத்தில் பைக் ஓட்டிய கேரள மாணவர் விபத்தில் உயிரிழப்பு!!
ஆன்லைன் பைக் பந்தய விளையாட்டில் ஈடுபட்ட மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெற்றோருக்கு தெரியாமல் இந்த பந்தயத்தில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் பைக் பந்தய விளையாட்டில் ஈடுபட்ட மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெற்றோருக்கு தெரியாமல் இந்த பந்தயத்தில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் உள்ள நேரு பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறையில் இறுதி ஆண்டு பயின்று வந்தவர் மிதுன் கோஷ். இவர் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் சவால் நிறைந்த பைக் பந்தயத்தில் சில நாட்களுக்கு முன் பங்கெடுத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த அயன் பட் என்ற நிறுவனம் மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கான பிரத்யேக பந்தயங்களை ஆன்லைன் மூலமாக நடத்துகிறது. ஆன்லைனில் வரும் சில விபரீத வீடியோ விளையாட்டுகள் போலவே இந்த பைக் பந்தயம் பல்வேறு சவால்களை கொண்டதாக இருக்கிறது.

இந்த பந்தயத்தில் பங்குபெறும் ரைடர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் சவால்களுடன் போட்டி நடத்தப்படும். இந்த பந்தயத்தின்படி, 24 மணிநேரத்ில் 1,600 கிமீ தூரத்தை ரைடர்கள் கடக்க வேண்டும். அதாவது, உணவு, தூக்கம் என எதையும் பொருட்படுத்தாமல் இந்த சவாலை ஏற்பவர்கள் போட்டியில் பங்குபெறலாம்.

இந்த அயன் பட் சவால் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அயன் பட் நிறுவனத்தின் இணையதளத்தில் சாதனையாளர்கள் பட்டியில் போட்டியில் வெற்றி பெறுபவரின் பெயரும் இடம்பெறும்.

தனது ஹோண்டா சிபிஆர் 250 ரெப்சால் எடிசன் பைக்கில் பயணத்தை துவங்கி இருக்கிறார். இந்த பந்தயத்தின்படி, 1,600 கிமீ தூரத்தை 24 மணிநேரத்தில் கடக்க வேண்டும் என்பதுதான். இதற்காக, பெங்களூர்- புனே நெடுஞ்சாலையை தேர்வு செய்து பைக்கை ஓட்டி இருக்கிறார்.

அதிகாலை 4 மணியளவில் தனது பைக்கில் சித்ரதுர்கா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிரக் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக தெரிகிறது. டிரக்கில் பிரேக் லைட்டுகள் இல்லாததால், சரியாக கணிக்க முடியாமல் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த மிதுன் டிரக்கின் பின்புறத்தில் மோதிவிட்டார்.

இந்த பயங்கர விபத்தில் மிதுன் கோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். டிரக் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

மிதுன் கோஷ் தனது கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவர் மூலமாக இந்த அயன் பட் பைக் பந்தயம் குறித்து தெரிந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே, 1,000 கிமீ தூரம் பைக்கில் பயணித்து நிறைவு செய்திருந்ததால், அந்த நம்பிக்கையில் இந்த பந்தயத்தில் பங்குபெற ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும், தனது இறுதி ஆண்டு புரொஜெக்ட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்க செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லி இந்த பைக் பந்தயத்தில் பங்கு கொண்டதும் தெரிய வந்துள்ளது.

பாலக்காடு- பெங்களூர்- புனே வழித்தடத்தை அவர் தேர்வு செய்து சென்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அயன் பட் நிறுவனத்தின் "Saddlesore 1000" என்ற சவால்கள் நிறைந்த பந்தயத்தை அவர் தேர்வு செய்து பைக்கில் பயணித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது பயணத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார். இதுபோன்ற விபரீத விளையாட்டுகளால் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி இருக்கிறது. பிள்ளைகளுக்கு சக்திவாய்ந்த பைக்குகளை வாங்கித் தரும் பெற்றோர் பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உருவாக்கி இருக்கிறது.

இதுபோன்ற ஆன்லைனில் வரும் விபரீத விளையாட்டுகளால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications