சைக்கிளில் வந்தவருக்கு 'ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட்' அபராதம்!! வலுக்கட்டாயமாக பணத்தை பிடுங்கிய போலீசார்
சைக்கிளில் பயணித்த கூலி தொழிலாளி அதிவேகத்தில் சென்றதாகவும், ஹெல்மெட் அணியவில்லை எனவும் கூறி போலீசார் ரூ.2,000 அபராதம் விதித்தனர். இல்லை.. இல்லை.. வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டனர்.
சைக்கிளில் பயணித்த கூலி தொழிலாளி அதிவேகத்தில் சென்றதாகவும், ஹெல்மெட் அணியவில்லை எனவும் கூறி போலீசார் ரூ.2,000 அபராதம் விதித்தனர். இல்லை.. இல்லை.. வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் காசிம். கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் தங்கியுள்ள காசிம், கூலி வேலைக்கு சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் காசர்கோடு அருகே உள்ள கும்பளா என்ற பகுதியில் காசிம் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தார்.

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், காசிமை திடீரென நிறுத்தினர். பின்னர் காசிம் அதிவேகத்தில் வந்ததாகவும், அதற்காக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

இதனால் காசிம் மிரண்டு போனார். ஏனெனில் அவர் பயணம் செய்த வாகனம் 'சைக்கிள்'. அதிவேகம் தவிர ஹெல்மெட் அணியவில்லை என்ற குற்றச்சாட்டையும் காசிம் மீது போலீசார் முன்வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காசிம், 2 ஆயிரம் ரூபாய் அபராதத்தை தன்னால் கட்ட முடியாது என தெரிவித்தார்.

ஏனெனில் காசிமுடைய ஒரு நாள் வருமானமே வெறும் 400 ரூபாய் மட்டும்தான். எனவே ''நீங்கள் அநியாயம் செய்கிறீர்கள்'' என போலீசாருடன், காசிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

பின்னர் காசிமின் பாக்கெட்களில் கையை விட்டு போலீசார் தேடியுள்ளனர். ஆனால் காசிமிடம் இருந்தது வெறும் 500 ரூபாய் மட்டுமே. அந்த 500 ரூபாயை போலீசார் அப்படியே எடுத்து கொண்டனர். இது என்ன வழிப்பறி கொள்ளையா? என காசிம் செய்வதறியாது திகைத்து நின்றார்.

இதன்பின் ''பட் உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு'' என்கிற பாணியில் போலீசார் நடந்து கொண்டனர். ஆம், காசிம் செலுத்திய இல்லை.. இல்லை.. காசிமிடம் இருந்து பிடுங்கிய 500 ரூபாய்க்கு ரசீது ஒன்றை போலீசார் வழங்கினர். அந்த ரசீதில் பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்.

சைக்கிளுக்கு எப்படி பதிவு எண் இருக்கும்? என குழப்பம் அடைய வேண்டாம். பொதுவாக ஒரு பதிவு எண்ணை ரசீதில் எழுதி, அதனை காசிமின் கையில் போலீசார் வழங்கி விட்டனர். அந்த பதிவு எண் ஒரு பெண்ணின் ஸ்கூட்டரினுடைய பதிவு எண் என்ற விஷயம் பின்னர் தெரியவந்தது.

நடந்த சம்பவங்களை எல்லாம் காசிம் சொல்வது போன்ற வீடியோ தற்போது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Asianetnews வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வைரல் ஆனதால், போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். IndiaTimes வெளியிட்டுள்ள செய்தியின்படி உடனடியாக இது குறித்த தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழு விசாரணைக்கு பின் தவறு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

விசித்திரமான காரணங்களை சொல்லி வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணம் பறிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக ஒரு முறை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சீட் பெல்ட் அணியவில்லை என்ற விசித்திரமான காரணத்தை சொல்லி போலீசார் அபராதம் விதித்தனர்.

இதுதவிர கோவை அருகே கடந்த சில நாட்களுக்கு முன் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கருணாகரன் என்பவருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா? வேன் ஓட்டும்போது அவர் ஹெல்மெட் அணியவில்லையாம்!!

ஹெல்மெட் அணியாததற்காக கருணாகரன் என்ற ஒரு வேன் டிரைவருக்கு மட்டும் போலீசார் அபராதம் விதிக்கவில்லை. இதே போன்றதொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயும் ஒரு முறை நடைபெற்றது.

இம்முறை போலீசாரிடம் சிக்கியவர் ராஜ்குமார் என்ற வேன் டிரைவர். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியவில்லை என்ற வித்தியாசமான காரணத்தை சொல்லி போலீசார் அபராதம் விதித்தனர்.

வாகன தணிக்கையின்போது ஒரு சில போலீசார் மனசாட்சியே இன்றி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவங்கள் அதனை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிபடுத்துவது போல் உள்ளன.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications