சூப்பர் பைக்குகளில் வந்தவர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... காரணம் இதுதான்!
பைக் மோதி சிறுமி பலியான சம்பவத்தையடுத்து, விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

பெங்களூர் அருகே கேடிஎம் பைக் மோதி சிறுமி பலியான சம்பவத்தையடுத்து, அந்த வழியாக வந்த சூப்பர் பைக்குகளை வழிமறித்து கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வார விடுமுறை நாட்களில் பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பைக்குகளில் அருகிலுள்ள நந்தி ஹில்ஸ் மலைப்பகுதி மற்றும் நெடுஞ்சாலைகளில் தங்களது விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் மேற்கொண்டு மாலையில் பெங்களூர் திரும்புவது வழக்கம்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் இளைஞர்கள் பெங்களூரிலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். அதுபோன்று இளைஞர் ஒருவரும் தனது கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் சிக்கபள்ளாபூர் நோக்கி நெடுஞ்சாலையில் பயணித்துள்ளார்.

தேவனஹள்ளியை கடந்து ஆவதி என்ற பகுதியில் உள்ள நந்தி உபச்சார் ஓட்டலுக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்ற 11வயது சிறுமி மீது அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற கேடிஎம் பைக் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த சிறுமி உயிரிழந்தார்.

இதையடுத்து, அங்கு கூடிய அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பைக்கில் வந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். மேலும், பைக்கையும் அடித்து நொறுக்கினர்.

அத்துடன், விடாமல் அந்த நெடுஞ்சாலை வழியாக ஹார்லி டேவிட்சன், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி, மோட்டார்சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.

மேலும், சம்பத்தில் தொடர்பு இல்லாத மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அந்த வழியில் சாலையில் அமர்ந்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இளைஞர்கள் தாக்கப்படுவதும், கேடிஎம் ட்யூக் 390, பிஎம்டபிள்யூ ஆர்ஜி1200 மற்றும் புத்தம் புதிதய ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டு கிடப்பது குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. பைக்கில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோக்கள் வாகன பிரியர்கள் நடத்தி வரும் சமூக வலைதள பக்கங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வழியாக பைக்கில் செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றனர் என்ற கோபத்தில் அப்பகுதி மக்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, விலை உயர்ந்த பைக்குகளில் வந்தவர்களை பிடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து போலீசார் வந்தும், தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை அங்கு கைமீறி போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அந்த வழியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் ஜாலி ரைடு என்ற பெயரில் விலை உயர்ந்த பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக புகார்கள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் சென்றாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துக்களையும், விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்க்கலாம்.

இந்த நிலையில், தாக்குதலுக்கான ஆளான கேடிஎம் பைக் உரிமையாளர், ஃபேஸ்புக் மூலமாக பதிந்த தகவலை எமக்கு வாட்சப் குறுந்தகவல் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில், சிறுமி மீது தனது பைக் மோதவில்லை என்றும், முன்னால் சென்ற பைக் ஒன்று சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
விபத்தை பார்ப்பதற்காக பைக்கை நிறுத்தி இறங்கியபோது, அங்கு இருந்தவர்கள் நாங்கள்தான் மோதிவிட்டோம் என்று கருதி தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்தும், உண்மைத்தன்மை குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறோம்.மாற்றங்கள் இருப்பின், தகவல்களை வாசகர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








