இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்த ராயல் என்பீல்டு பணிகிறது.. புதிய ஹிமாலயன் ஏபிஎஸ் பைக் அறிமுகம்
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஓரவஞ்சனை செய்து வந்த ராயல் என்பீல்டு நிறுவனம், மத்திய அரசின் உத்தரவு காரணமாக, ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பைக்குகளை லான்ச் செய்ய தொடங்கியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஓரவஞ்சனை செய்து வந்த ராயல் என்பீல்டு நிறுவனம், மத்திய அரசின் உத்தரவு காரணமாக, ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பைக்குகளை லான்ச் செய்ய தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதிய ஹிமாலயன் 400 ஏபிஎஸ் பைக் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

125 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS)பிரேக் வசதியை கட்டாயம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

ஏபிஎஸ் வசதி பாதுகாப்பானது என்பதால்தான் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு நெருங்குவதால், அனைத்து இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும், தங்களின் மாடல்களில், ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில், ஏபிஎஸ் வசதியை வழங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்குகளில் மட்டும் ஏபிஎஸ் வசதி இல்லாமல் இருந்தது.

ஆனால் இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளிலும், ஏபிஎஸ் பிரேக் வசதியை, தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்க தொடங்கியுள்ளது. கிளாசிக் சிக்னல்ஸ் 350 எடிசன் என்ற பைக்கை, ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த வாரம் லான்ச் செய்தது.

இந்த பைக்கில், ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை, கிளாசிக் சிக்னல்ஸ் 350 எடிசன் பெறுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாய்.

இந்த சூழலில், ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய புதிய 2018 ஹிமாலயன் 400 பைக்கை, ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது லான்ச் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை, 1.79 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், இது 11 ஆயிரம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக லான்ச் செய்யப்பட்டுள்ள 2018 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஏபிஎஸ் பைக்கில், அதே 411 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 6,500 ஆர்பிஎம்மில் 24.5 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தண்டர்பேர்டு எக்ஸ் ரேஞ்ச் பைக்குகளில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஏபிஎஸ் வசதியை வழங்கவுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய தண்டர்பேர்டு எக்ஸ் ரேஞ்ச் பைக்குகள் வெகு விரைவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 இரட்டையர்கள் என குறிப்பிடப்படும் இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த 2 பைக்குகளும் இந்தியாவில் இன்னும் லான்ச் ஆகவில்லை. இந்த 2 பைக்குகளும், ஏபிஎஸ் வசதியுடன் வரும் நவம்பர் மாதம் லான்ச் ஆகலாம் என கூறப்படுகிறது. அதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றான அனைத்து ராயல் என்பீல்டு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்படவுள்ளது.

அனேகமாக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்ளாக, அனைத்து ராயல் என்பீல்டு பைக்குகளிலும் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு விடும். ஏனெனில் தற்போதைக்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கவனம் எல்லாம், இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை லான்ச் செய்வதில்தான் உள்ளது.

இந்த 2 பைக்குகளிலும், இன்-லைன் 2 சிலிண்டர் 648 சிசி ஏர் கூல்டு (ஆயில் கூலிங் உடனும்) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 எச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.
சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் பைக் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த பெகாசஸ் 500 பைக் உரிமையாளர்கள், தங்கள் பைக்குகளை குப்பையில் வீசி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications