ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி பைக்குகளை களமிறக்கும் மஹிந்திரா!
ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பிராண்டுகளிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கிளாஸிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த புதிய மாடல்களை அறிமுகம் செய்
ஜாவா மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து யெஸ்டி பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 15ந் தேதி ஜாவா பிராண்டில் மூன்று புதிய தலைமுறை மாடல்களை மஹிந்திராவின் அங்கமாக செயல்பட்டு வரும் கிளாஸிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, ரூ.1.55 லட்சம் முதலான விலையில் இந்த மாடல்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பிராண்டுகளிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கிளாஸிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான கால அளவு எதையும் அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் யெஸ்டி பிராண்டில் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் உருவாக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் வடிவமைப்பு மாறுதல்களுடன் யெஸ்டி பைக்குகள் வர இருக்கிறது.

யெஸ்டி பிராண்டில் வரும் புதிய பைக் மாடல்கள் 250சிசி முதல் 350சிசி ரகத்தில் நிலைநிறுத்தப்படும். அதேநேரத்தில், பிஎஸ்ஏ பிராண்டில் வரும் பைக்குகள் அதிக சிசி திறன் கொண்ட எஞ்சின்களுடன் வர இருக்கிறது. அதாவது, 500சிசி முதல் 750சிசி வரையிலான எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

தற்போது ஜாவா பிராண்டுக்கான டீலர்கள் மற்றும் பிரபலப்படுத்தும் பணிகளில் கிளாஸிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 105 டீலர்களுடன் ஜாவா வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. இதில், 65 டீலர்கள் வரும் டிசம்பர் முதல் செயல்பட துவங்கும்.

மஹிந்திரா மோஜோ பைக்கில் இருக்கும் எஞ்சினின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 293சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய ஜாவா 42 மற்றும் ஜாவா 300 மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ஜாவா 42 மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ஜனவரி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. பிப்ரவரியில் டெலிவிரி பணிகள் துவங்கும். மஹிந்திரா நிறுவனத்தின் பீதம்பூர் ஆலையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகிய மூன்று பிராண்டிலும் வரும் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சாலைகளை மீண்டும் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள்களை பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பிராண்டுகளை கையாள இருக்கும் கிளாஸிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா, ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகிய மூவர்தான் கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தை கூட்டாக தொடங்கியுள்ளனர். இதில், மஹிந்திரா நிறுவனம் மட்டும் 60 சதவீத பங்குகளை தன்கைவசம் வைத்துள்ளது.

மேலும், யெஸ்டி பிராண்டின் விற்பனை உரிமையை அனுபம் தரேஜாவும், பிஎஸ்ஏ நிறுவனத்தின் விற்பனை உரிமையை ஐடியல் ஜாவா நிறுவனத்தை நிறுவிய ஃபரோக் இரானியின் மகன் போமன் ரஸ்டம் இரானி வசமும் உள்ளது.


Click it and Unblock the Notifications








