மோடிகிட்ட பேசியாச்சு...சுசுகி மீதான கிராப் எகிறியது...
இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களை களமிறக்க சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களை களமிறக்க சுசுகிநிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்பு போல் சொதப்பாமல், அதிநவீன வசதிகளுடன் கூடிய எலக்ட்ரிக் டூவீலரை வழங்க சுசுகிநிறுவனத்தின் இன்ஜினியர்கள் மெனக்கெட்டு வருவதால், தற்போதே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த சுசுகிமோட்டார் கார்ப் நிறுவனத்தின் துணை நிறுவனம் சுசுகிமோட்டார் சைக்கிள் இந்தியா. ஜிக்ஸர் உள்ளிட்ட பல்வேறு ஸ்போர்ட்ஸ் பைக்குகளை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், இந்திய மார்க்கெட்டிற்கு எலக்ட்ரிக் டூவீலர்களையும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

சுசுகி நிறுவனத்தின் சேர்மன் ஒசாமு சுசூகி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்தாண்டு டிசம்பர் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கு அதிக அளவில் முதலீடு செய்வது குறித்து அப்போதே மோடியுடன் அவர் விவாதித்திருந்தார்.

முதலில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குதான் சுசுகி முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த திட்டமும் அவர்களிடம் உள்ளது. இதுகுறித்த தகவல்களை சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா மேனேஜிங் டைரக்டர் சதோஷி உச்சிடா வெளியிட்டுள்ளார்.

சதோஷி உச்சிடா கூறுகையில், ''வழக்கமான ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் பயணிக்கும் வகையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எப்படி வழங்குவது? என ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.

எனினும் 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் டூவீலரை லான்ச் செய்து விடுவோம் எனவும் சதோஷி உச்சிடா கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஓடும் 30 சதவீத வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்திய அரசின் இந்த எலக்ட்ரிக் வாகன திட்டத்திற்கு உதவி செய்ய விரும்புவதாகவும் சுசுகிநிறுவனம் தெரிவித்துள்ளது.

சுசுகி நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டிலேயே, சிறிய 100 வோல்ட் பேட்டரியுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கியது. அதில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்க முடியும். அந்த சமயத்தில் அதன் விலையும் மிக அதிகமாக இருந்தது.

ஆனால் இன்று டெக்னாலஜி மாறிவிட்டது. விலையும் கூட அன்றுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு குறைந்து விட்டது. இனி வருங்காலத்தில் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே சுசுகி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு முன்பை காட்டிலும் மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சுசுகி நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்யவுள்ள எலக்ட்ரிக் டூவீலரில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் அவை வடிவமைக்கப்படவுள்ளன.

இந்தியாவில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுசுகி என்ற பெயரில் சுசுகி நிறுவனம் கார்களை விற்பனை செய்து வருகிறது. மாருதி சுசுகிநிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் (எலக்ட்ரிக் வேகன் ஆர்) வரும் 2020ம் ஆண்டு லான்ச் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயத்தில் சுசுகி நிறுவனமும் தனது எலக்ட்ரிக் டூவீலரை களமிறக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே சுசுகி நிறுவனத்தின் இன்ஜினியர்கள், எத்தகைய எலக்ட்ரிக் டூவீலரை இந்தியாவில் களமிறக்க போகின்றனர்? என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








