வாகனத் தணிக்கை பெயரில் தொடரும் போலீஸ் அராஜகம்!
வாகனத் தணிக்கை என்ற பெயரில் போலீசார் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. திருச்சியில் காவல் ஆய்வாளரின் அத்துமீறலால் கர்ப்பிணி ஒருவர் உயிரிழக்கும் அளவுக்கு போலீசாரின் அராஜகப் போக்கு
திருச்சியில் வாகனத் தணிக்கையின்போது காவல் ஆய்வாளரின் அடாவடியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வாகனச் சோதனை என்ற பெயரில் போலீசார் இதுபோன்ற அடாவடி செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி உள்ளது. வாகனச் சோதனை என்ற பெயரில் அத்துமீறும் காவல் துறையினர் குறித்து பதிவு செய்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரி அருகே பைக்கில் சென்ற வாலிபர் மீது போலீஸ் அதிகாரி லத்தியால் தாக்கியதில், அவரது மண்டை உடைந்தது. ஆனாலும், திருச்சி சம்பவம் இதனை விட கொடூரமாக இருக்கிறது.

இந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உயிர் பறிபோனது துரதிருஷ்டவசமானது. இது நிச்சயம் தவிர்க்கப்பட்ட வேண்டிய விஷயமாகவே இருந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற அடாவடி போலீசாருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஹெல்மெட் போடாமல் சென்றது குற்றமாக இருப்பினும், வாகன எண்ணை குறித்துக் கொண்டு புகார் பதிவு செய்திருக்கலாம்.

அந்த பைக்கை துரத்திச் சென்று எட்டி உதைக்கும் அளவுக்கு காவல் துறை அதிகாரி சென்றிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடாகவும், தனது அதிகாரத்தை காட்டும் போக்காகவே இருக்கிறது.

வாகனச் சோதனைகள் மூலமாக இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்பட்டு வருவதுடன், சில சமயங்களில் வாகனத் தணிக்கையின்போது காவல் துறையினர் பாய்ந்து சென்று இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க முயலும்போது கீழே விழுந்து விபத்துக்களும் ஏற்படுகின்றன.

மேலும், வேகமாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதால், பின்னால் வரும் வாகனங்களும் மோதும் ஆபத்தும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் சகிக்க முடியாத விஷயமாக மாறி இருக்கிறது. வாகனத் தணிக்கை என்பதையே வருமானம் வரும் விஷயமாக மாறிப் போனதுதான் துரதிருஷ்டத்தின் உச்சம்.

வாகனச் சோதனைக்கான சட்ட வரையறைகள் குறித்து காவல் துறையினருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்குவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இதுபோன்ற காவல் அதிகாரிகள் மீது சஸ்பென்ட் செய்வதை காட்டிலும், பணி நீக்கம் செய்து கடும் நடவடிக்கைகளும், தண்டனைகளும் வழங்கப்படுவதும் எதிர்காலத்தில் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும்.

வாகனச் சோதனைக்கு காவல் துறையினருக்கு கொடுக்கப்படும் அதிகார வரம்பையும் குறைக்க வேண்டிய கட்டாயத்தை திருச்சி சம்பவம் ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற துருதிருஷ்டவசமான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்த சம்பத்தில் உரிய நடவடிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் அரசு வழங்குவதும் அவசியம்.


Click it and Unblock the Notifications








