திருச்சி மாணவர்கள் தயாரித்த சூப்பர் பைக் ஸ்பெயின் ரேஸில் பங்கேற்பு... 17 நாடுகளுக்கு கடும் சவால்
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தயாரித்த பைக், ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச பந்தயத்தில் கலந்து கொள்கிறது.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தயாரித்த பைக், ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச பந்தயத்தில் கலந்து கொள்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாராகும் அந்த பைக், 17 நாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகளுடன் போட்டியிடவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்கானிஸ் நகரில், மோட்டோ ஸ்டூடண்ட் சர்வதேச போட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இன்ஜினியரிங் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் பைக்குகளை கொண்டு மோட்டோ ஸ்டூடண்ட் ரேஸ் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மோட்டோ ஸ்டூடண்ட் போட்டி, வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ரேஸில், தமிழகத்தின் திருச்சியில் உள்ள கே.ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பங்கேற்கிறது.

எலக்ட்ரிக் மோட்டார் பைக் மற்றும் பெட்ரோல் மோட்டார் பைக் (250 சிசி 4 ஸ்டிரோக் இன்ஜின் உடன்) என 2 கேட்டகரிகளில், ரேஸ் நடத்தப்படுவது வழக்கம். இதில், திருச்சி மாணவர்களின் மோட்டார் பைக், மோட்டோ ஸ்டூடண்ட் பெட்ரோல் கேட்டகரியில் பங்கேற்கிறது.

உலகம் முழுவதும் உள்ள 17 நாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் மோட்டோ ஸ்டூடண்ட் ரேஸில் பங்கேற்கின்றன. அப்படிப்பட்ட சர்வதேச ரேஸில், தமிழக மாணவர்களும் பங்கேற்க இருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மெக்கானிக்கல் துறையை சேர்ந்த வருண் ராஜன், சூர்யா, சண்முகநாதன், ராஜேந்திரன், குமரேசன், ECE துறையை சேர்ந்த வைஸ்ணவி, சுசாந்தி சுகி, EEE துறையை சேர்ந்த பேரின்பராஜ், ரிஜோய் ஆகிய 9 மாணவ, மாணவிகள் மோட்டோ ஸ்டூடண்ட் ரேஸிற்கான மோட்டார் பைக்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிசைன் மற்றும் பேப்ரிகேஷன் ஆகிய பணிகளை மெக்கானிக்கல் துறை மாணவர்கள் மேற்கொள்கின்றனர். ECE மாணவர்கள் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் (ECU) பணிகளையும், EEE மாணவர்கள் மோட்டார் பைக்கின் வயரிங் ஹார்னெஸ் பணிகளையும் கையில் எடுத்து கொண்டுள்ளனர்.

இந்த மோட்டார் பைக்கில், 248.88 சிசி திறன் கொண்ட 4 ஸ்டிரோக் லிக்யூட் கூல்டு இன்ஜின் (கேடிஎம் ஆர்சி இன்ஜின்) பொருத்தப்படுகிறது. இது 30.87 ஹார்ஸ்பவர் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மோட்டார் பைக்கின் டிசைனிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன.

தற்போது பேப்ரிகேஷன் பணிகளில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் மாத இறுதியில் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் சென்னை மற்றும் கோவையில் உள்ள ரேஸிங் சர்க்யூட்களில், இந்த மோட்டார் பைக் சோதனை செய்து பார்க்கப்படும்.

ஸ்பெயினில் நடைபெறவுள்ள பைனல் ரேஸில், சென்னையை சேர்ந்த ரேஸர் நரேஷ் பிரபு இந்த மோட்டார் பைக்கை ஓட்டவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்த புராஜெக்ட்டிற்காக திருச்சி மாணவ, மாணவிகள் உழைத்து வருகின்றனர். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மோட்டோ இன்ஜினியரிங் பவுண்டேஷன் மற்றும் டெக்னோ பார்க் மோட்டோ லேண்ட் ஆகியவற்றால் நடத்தப்படும் சர்வதேச போட்டிதான் மோட்டோ ஸ்டூடண்ட். எனவே உலக தரம் வாய்ந்த வகையிலான மோட்டார் பைக்கை உருவாக்க வேண்டியுள்ளது.

இதனால் சில ஸ்பேர் பார்ட்ஸ்களை ஜப்பானில் இருந்து திருச்சி மாணவர்கள் இறக்குமதி செய்துள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக அவர்களின் ஷெட்யூலில் சிறிய தாமதம் ஏற்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஸ்டூடண்ட் போட்டி பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் முதல் கட்டத்தில், இன்டஸ்ட்ரியல் பாய்ண்ட் ஆப் வியூ-வில் இருந்து ப்ராஜெக்ட் மதிப்பிடப்படும். போட்டியின் 2வது கட்டத்தில், மோட்டார் பைக்கின் பாதுகாப்பு (safety) மற்றும் செயல்பாடு (functionality) ஆகியவை குறித்து தீர்மானிக்கும் வகையிலான சோதனைகள் செய்யப்படும்.

இதன்பின் இறுதியாக ரேஸ் நடத்தப்பட்டு போட்டி நிறைவடையும். ஸ்பெயின் நாட்டின் அல்கானிஸ் நகரில் உள்ள மோட்டார் லேண்ட் ஆர்கான் சர்க்யூட்டில்தான் பைனல் ரேஸ் நடைபெறும். மோட்டோ ஜிபி போன்ற பல உலக புகழ்பெற்ற ரேஸ்கள் இங்கு நடைபெற்றுள்ளன.

திருச்சி மாணவர்கள் மட்டுமல்லாது, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி என தமிழகத்தை சேர்ந்த மேலும் 2 கல்வி நிறுவனங்களும் இந்த போட்டியில் பங்குபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








