பைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..
பைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் தூத்துக்குடி இளைஞர் ஒருவர் போலீசாரை அலற விட்டுள்ளார். மின் கம்பத்தில் ஏறி அசால்ட்டாக தம் அடித்து கொண்டு அவர் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் தூத்துக்குடி இளைஞர் ஒருவர் போலீசாரை அலற விட்டுள்ளார். மின் கம்பத்தில் ஏறி அசால்ட்டாக தம் அடித்து கொண்டு அவர் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஜோதி ரமேஷ். இவர் இரு சக்கர வாகனம் ஒன்றில், கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். ஜோதி ரமேஷின் நண்பர் ஒருவரும், அவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்தார்.

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஜோதி ரமேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினர். பின்னர் இரு சக்கர வாகனத்திற்கு உண்டான ஆவணங்களை கேட்டனர்.

ஆனால் போலீசாரின் கேள்விகளுக்கு ஜோதி ரமேஷ் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜோதி ரமேஷ் மது போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

எனவே ஜோதி ரமேஷின் இரு சக்கர வாகனத்தினுடைய சாவியை போலீசார் எடுத்து சென்று விட்டனர். பேசி கொண்டிருந்த நேரத்தில் திடீரென இரு சக்கர வாகனத்தின் சாவியை போலீசார் எடுத்து கொண்டதால், ஜோதி ரமேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில், ஜோதி ரமேஷ் ஈடுபட்டார். சாவியை திருப்பி வழங்கும்படி அவர் கேட்டதற்கு, போலீசார் மறுத்து விட்டனர். அபராதம் செலுத்துபடியும் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜோதி ரமேஷ், கோவில்பட்டி மாதா கோயில் தெரு சந்திப்பு வளைவில் உள்ள ஒரு மின் கம்பத்தில், திடீரென ஏறி கொண்டார். பின்னர் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக கூறி, அவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

அத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் ஜோதி ரமேஷ் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே கீழே இறங்கி வரும்படி ஜோதி ரமேசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போலீசார் எவ்வளவு கேட்டு கொண்டும், கீழே இறங்கி வர ஜோதி ரமேஷ் மறுத்து விட்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜோதி ரமேஷின் போராட்டத்தால் கலக்கம் அடைந்த போலீசார், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து, உடனடியாக அப்பகுதியில் மின் வினியோகத்தை துண்டித்தனர்.

இதனிடையே மின் கம்பத்தில் இருந்தவாறே ஜோதி ரமேஷ் புகை பிடிக்க தொடங்கினார். பின்னர் மின் கம்பத்தின் கம்பியை பிடித்தபடி தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பொது மக்கள் குவிய தொடங்கினர்.

அத்துடன் உதவி ஆய்வாளர்கள் ராமசாமி, வசந்தகுமார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலை முத்து உள்ளிட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று, ஜோதி ரமேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு வழியாக மாலை 6.45 மணிக்கு தொடங்கிய போராட்டத்தை இரவு 7.45 மணியளவில் முடித்து கொண்டு ஜோதி ரமேஷ் கீழே இறங்கினார். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் (அக்.14) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜோதி ரமேஷை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். tamil.news18 வெளியிட்டுள்ள செய்தியின்படி இவர் இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன் செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த ஜோதி ரமேஷ்.

அப்போது தொலைந்து போன தனது பள்ளி சான்றிதழ்களை மீட்டு தர வலியுறுத்தி ஜோதி ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தற்போது போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து மீண்டும் ஒரு முறை போராட்டத்தில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இளைஞர் மது அருந்தி இருப்பதாக கூறி, அவரின் பைக் சாவியை போலீசார் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More from DriveSpark
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








