வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய யமஹா..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு யமஹா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு யமஹா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு என கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதி குவிந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், கேரள மாநிலத்திற்கு நிதி உதவி அளித்துள்ளன. பொதுமக்கள், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக கேரள மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான வாகனங்களும், வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ளன. எனவே கேரள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும், சிறப்பு முகாம்களை அறிவித்துள்ளன.

இந்த வரிசையில் யமஹா நிறுவனமும் இணைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யமஹா நிறுவன இரு சக்கர வாகனங்களை சரி செய்வதற்கான சிறப்பு முகாம், வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான லேபர் சார்ஜ் 100 சதவீதம் இலவசம். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட யமஹா சர்வீஸ் சென்டர்களிலும், இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் கேரளாவில் உள்ள யமஹா வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும், வரிசையாக கேரள மக்களுக்கு உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹோண்டா நிறுவனம் 3 கோடி ரூபாயும், டிவிஎஸ் நிறுவனம் 1 கோடி ரூபாயும், கேரளாவிற்கு நன்கொடையாக வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications