கேரள கல்லூரியில் அனுமதி பெறாமல் ஆட்டோ ஷோ... மாடிபிகேஷன் செய்யப்பட்ட 10 பைக்குகள் பறிமுதல்...
கேரள கல்லூரியில் அனுமதி பெறாமல் ஆட்டோ ஷோ நடத்தப்பட்டது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடிபிகேஷன் செய்யப்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியாவில் கார் மற்றும் பைக்குகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாடிபிகேஷன் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில வெளிநாடுகள் அளவிற்கு இல்லை என்றாலும், இந்த கலாச்சாரம் இந்தியாவில் ஆழமாக வேரூன்ற தொடங்கியுள்ளது. ஆனால் இது இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், இந்தியாவில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது சட்ட விரோதமானது என கூறப்பட்டிருந்தது. இந்தியாவை பொறுத்தவரை கார்களை காட்டிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள்தான் அதிக அளவில் மாடிபிகேஷன் செய்யப்படுகின்றன. இதில், ஆஃப்டர் மார்க்கெட் ஹாரன்கள் மற்றும் எக்ஸாஸ்ட்களை அதன் உரிமையாளர்கள் பொருத்தி கொள்கின்றனர். அரசால் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக ஒலியை இவை உமிழ்கின்றன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் துரிதமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் போலீசார் மற்றும் அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஏனெனில் நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும், கேரளாவில்தான் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்.

மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்வது மற்றும் அவற்றின் பதிவை ரத்து செய்வது ஆகிய வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கண்டறிய சமூக வலை தளங்களையும் கூட கேரள மாநில அதிகாரிகள் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சட்டவிரோதமாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் புகைப்படங்களை பதிவு செய்பவர்களின் சமூக வலை தள கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன. இதன்மூலம் வாகனத்தின் உரிமையாளரை அதிகாரிகள் கண்டறிகின்றனர். என்றபோதும் மாடிபிகேஷன் செய்யப்பட்ட பாகங்களை அகற்றி விட்டு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தங்கள் வாகனத்தை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு மாற்றப்பட்ட வாகனத்தை ஆர்டிஓ முன் ஆஜராகி காண்பிக்க வேண்டும். இதனை செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் ஆட்டோ ஷோ நடைபெற்று கொண்டு இருந்தது. இதில், மாடிபிகேஷன் செய்யப்பட்ட பைக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது அம்மாநில மோட்டார் வாகன துறை அதிகாரிகள் கல்லூரிக்குள் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் மாடிபிகேஷன் செய்யப்பட்டிருந்த பைக்குகளை உடனே பறிமுதல் செய்தனர். மொத்தம் 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அவற்றின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆர்டிஓ முன்பு ஆஜராக வேண்டும். ஆனால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் அவை சாலையில் உலா வரவில்லை. அதே சமயம் இந்த ஆட்டோ ஷோவை நடத்த சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் அனுமதி பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட மாடிபிகேஷன்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிராக உள்ள நிலையில், உரிய அனுமதி பெறாமல் ஆட்டோ ஷோவை நடத்தியதால், கல்லூரி நிர்வாகத்தை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.


Click it and Unblock the Notifications








