ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய சார்ஜர் அறிமுகம்!
ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு புதிய சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த புதிய வீட்டு சார்ஜரை பெற முடியும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்கள் முக்கிய தேர்வாக இருந்து வருகின்றன. தற்போது பெங்களூர் மற்றும் சென்னையில் மட்டுமே ஏத்தர் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில், தனது 450 ஸ்கூட்டருக்கான புதிய சார்ஜர் ஒன்றை ஏத்தர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, இதனை வீடு அல்லது அலுவலகத்தில் பொருத்திக் கொள்ளும் வகையில் அடக்கமான வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏத்தர் டாட் (Ather Dot) என்ற பெயரில் இந்த புதிய வீட்டு சார்ஜரை ஏத்தர் அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் சார்ஜ் ஏற்றும் முறை மற்றும் நேரம் குறித்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த புதிய வீட்டு சார்ஜரை உருவாக்கி இருப்பதாக ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சார்ஜர் மிகவும் அடக்கமாக இருப்பதுடன், அதிக சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த சார்ஜர் மூலமாக ஏத்தர் 450 ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜர் செய்வதற்கு 5 மணி 15 நிமிடங்கள் பிடிக்கும். 4.5 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றி விட முடியும்.

ஏத்தர் டாட் சார்ஜரில் சில விசேஷ தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இரவு நேரத்தில் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டால், தானியங்கி முறையில் சார்ஜ் ஏற்றுவது நின்றுவிடும். சார்ஜ் போட்டுவிட்டு நிம்மதியாக தூங்கலாம்.

அதேபோன்று, மின்னழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் சார்ஜரில் பாதிப்பு ஏற்படாத வகையிலான தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. ஏத்தர் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக இந்த சார்ஜரின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டு இருப்பது சிறப்பு.

மேலும், இந்த புதிய ஏத்தர் டாட் சார்ஜர் மூலமாக ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். பிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியாது. இந்த சார்ஜரை வீட்டில் வந்து பொருத்திக் கொடுப்பதற்கு ரூ.1,800 கட்டணமாக நிர்ணயித்துள்ளது ஏத்தர் நிறுவனம். பயிற்சி பெற்ற எலெக்ட்ரீசியன் மூலமாகவும் கையேடு மூலமாக பொருத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வீட்டு சார்ஜரை உடனடியாக பெற முடியும். பெங்களூர் வாடிக்கையாளர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த சார்ஜர் டெலிவிரி கொடுக்கப்படும் என்று ஏத்தர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








