மோடி அரசின் அதிரடியால் கிடைத்த நன்மை... இந்திய மக்களின் எதிர்பார்ப்பு படிப்படியாக நிறைவேறுகிறது...
மோடி அரசின் அதிரடியால் நன்மை கிடைத்துள்ளது. இந்திய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயம் படிப்படியாக நடக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது.

இந்த இரண்டு பிரச்னைகளும் தலை வலியை கொடுத்து வருகின்றன. எனவேதான் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகள் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் இரு முக்கியமான பிரச்னைகள் உள்ளன. ஒன்று எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிகமான விலை. மற்றொன்று சார்ஜிங் ஸ்டேஷன்களின் குறைவான எண்ணிக்கை. இந்த இரண்டு பிரச்னைகளையும் களைய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

தற்போது இதன் பலன் மக்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. டெஸ்லா நிறுவனம் அதிநவீன எலெக்ட்ரிக் கார்களை உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் இரு சக்கர வாகன டெஸ்லா என புகழப்படும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் முதலில் பெங்களூர் நகரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த சூழலில் சமீபத்தில்தான் சென்னையிலும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய நிலையில் பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. இதுதவிர மும்பை, ஐதராபாத், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், புனே உள்ளிட்ட நகரங்களில் கால் பதிக்கவும் ஏத்தர் திட்டமிட்டுள்ளது.

மேலும் 2023ம் ஆண்டிற்குள் இன்னும் 30 நகரங்களில் விற்பனையை தொடங்க ஏத்தர் முடிவு செய்துள்ளது. ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒரே BLDC மின் மோட்டார்தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரியும் வேறுபடுகிறது. ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2.45 kWh லித்தியம் இயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அதே சமயம் ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்றே சிறிய 1.92 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.

இந்த சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியால், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 340 மற்றும் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையையும் குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 1) வெளியானது. இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் 9 ஆயிரம் ரூபாய் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெங்களூரில் ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி 1.02 லட்ச ரூபாய்க்கும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி 1.12 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கும். இவை இரண்டும் பெங்களூர் ஆன் ரோடு விலையாகும். அதேபோல் சென்னையில் ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி 1.10 லட்ச ரூபாய்க்கும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி 1.22 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கும். இவை இரண்டும் சென்னை ஆன் ரோடு விலையாகும்.

முன்னதாக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி குறைப்பால் இதன் விலை 1.50 லட்ச ரூபாய் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஒரு சில எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன.

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் விலை இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், இது அனைவராலும் வாங்க முடியாத விலை எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகள் தற்போதுதான் தீவிரமடைந்துள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு சமீப காலமாகதான் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வருகிறது. எனவே வருங்காலங்களில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இன்னும் குறைவான விலையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் படிப்படியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் போன்ற தயாரிப்புகள் மிக முக்கியமானவை.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்தான் இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பு. வரும் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார், அனைவராலும் வாங்க கூடிய விலையில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








