சென்னையை தொடர்ந்து லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை குறிவைக்கும் இந்திய நிறுவனம்...
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உலகளவில் லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், மின்சாரம் சார்ந்த வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
இது, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்தியாவில் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரு மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்துவருகின்றது. இந்த ஸ்கூட்டர்கள் முன்னதாக பெங்களூருவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வந்தன.
இதனை, நாடு முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் விதமாக, ஏத்தர் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதனடிப்படையில், சமீபத்தில்தான் தமிழகத்தின் தலைநகரான சென்னையில், இந்நிறுவனத்தின் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இதில், ஏத்தர் 450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1,31,683 என்ற ஆன்ரோடு விலையிலும், 350 மாடல் ரூ. 1,19,091 என்ற ஆன்ரோடு விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த விலைகள், மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஆன்ரோடு விலையாகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெங்களூருவைக் காட்டிலும் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை அதிக விலையைக் கொண்டிருக்கின்றது.

அதற்கு, கர்நாடகா-தமிழ்நாடு இடையில் இருக்கும் விரி விதிப்பு முறையே இந்த விலை வித்தியாசத்திற்கு காரணமாக இருக்கின்றது. இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், கூடிய விரைவில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு சிறப்புகளைப் பெற்று இந்தியாவில் கலக்கல் செய்து வரும் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், தற்போது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் கெத்துகாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்... ஏத்தர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது உலக வெளியீடாக லத்தின் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.

இந்த விரிவாக்கத்தைத் தொடர்ந்து, ஏத்தர் நிறுவனம், அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் தீட்டி வருகின்றது. அந்தவகையில், ஆண்டு ஒன்றிற்கு 1 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயார் செய்ய அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

முன்னதாக, சென்னையில் களமிறங்கிய இந்நிறுவனம், இரு ஹெல்மெட்டுகள் இலவசம் என்ற திட்டத்தை அறிவித்தது. அத்துடன், ஸ்கூட்டரின் விலையிலேயே இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் அடக்கி விற்பனைச் செய்ய இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, சென்னை வாசிகளை கவரும் விதமாக, நகரின் முக்கிய பகுதிகளான ஷாப்பிங் காம்பளக்ஸ், அலுவலகம், கஃபே பகுதி மற்றும் நிறுவனங்கள் சிலவற்றில் ஏத்தர் கிரிட் எனப்படும் சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. இந்த நிலையங்களை வருகின்ற டிசம்பர் மாதம் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அது அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஏத்தர் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் அதில் இலவசமாக சார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 வருடங்களுக்குள் நாடு முழுவதும் 6,500 சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னையின் முதல் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஷோரூம், நுங்கம்பாக்கத்தில் உள்ள வாலஸ் கார்டனில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் தற்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் சார்ஜ் நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனை விரிவுப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இத்துடன், சென்னை வாசிகள் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும், ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னையை அடுத்து நாட்டின் பிற பகுதிகளான புனே, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில்தான், ஏத்தர் நிறுவனம், உலகளவில் மேற்கூறிய முக்கிய நாடுகளில் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.

ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு ஸ்கூட்டர்களும், வடிவமைப்பு மற்றும் ஃப்ரேம் ஆகியவற்றில் ஒரே மாதிரியாக காட்சியளித்தாலும், அவை சிறப்பம்சம் மற்றும் செயல்திறனிலும் மாறுபட்டு காணப்படுகின்றன.

அந்தவகையில், ஏத்தர் 340 ஸ்கூட்டரில் 1.92 KWh பேட்டரியும், ஏத்தர் 450 மாடலில் 2.4KWh பேட்டரியும் பொருத்தப்பட்டு உள்ளது. இதில், அதிக திறன்கொண்ட பேட்டரியைப் பெற்றிருக்கும் 450 மாடலின் ரேஞ்ச் எனப்படும் பயணிக்கும் தூரம், அதிகமாக இருக்கின்றது. அத்துடன், அது 340 மாடலைக் காட்டிலும் அதிக வேகம் கொண்டதாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இந்த ஏத்தர் 340ஐக் காட்டிலும் 450 மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த ஏத்தர் 450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்து, ஈக்கோ மோடில் வைத்து பயன்படுத்தினால் 75 கிமீ தூரமும், சாதாரண மோடில் வைத்து ஓட்டினால் 60 கிமீ தூரமும் செல்லலாம். அதேசமயம், ஏத்தர் 340 மாடல் ஈக்கோ மோடில் 60 கிமீ தூரமும், சாதாரண நிலையில் 50 கிமீ தூரமும் பயணிக்கும்.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் தொழில்நுட்ப வசதியாக 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இது, சார்ஜ் நிலையங்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் வசதி, பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
{document1}


Click it and Unblock the Notifications