பிரபல நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை திடீரென உயர்ந்தது... புதிய விலை இதுதான்...
ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எஸ்340 (S340) மற்றும் எஸ்450 (S450) என்ற இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது எஸ்340 மற்றும் எஸ்450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.

இதன்படி ஏத்தர் எஸ்340 மற்றும் ஏத்தர் எஸ்450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் 3,480 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பழைய விலை 1,09,750 ரூபாய். இதன் புதிய விலை 1,13,230 ரூபாய். அதே சமயம் ஏத்தர் எஸ்450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பழைய விலை 1,24,750 ரூபாய். இதன் புதிய விலை 1,28,230 ரூபாய். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் ஃபேம் மானியம், கர்நாடக மாநில அரசால் விதிக்கப்படும் 500 ரூபாய் செஸ் வரி ஆகியவற்றை இந்த விலை உள்ளடக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களூர் நகரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆர்டர்கள் புக் ஆகி விட்டன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்குவதை தவிர, பெங்களூர் நகர் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.

பெங்களூர் நகரில் உள்ள அனைத்து எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்களும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இவை ஏத்தர் க்ரிட் (Ather Grid) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பெங்களூருக்கு அடுத்தபடியாக தமிழக தலைநகர் சென்னையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அனேகமாக வரும் ஜூன் மாதம் சென்னையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் களமிறக்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்பவர்கள், டெஸ்ட் டிரைவ் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவார்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்கப்படும்போது, பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பெங்களூரை போன்று சென்னை முழுவதும் ஏத்தர் க்ரிட்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஷாப்பிங் மால்கள், டெக் பார்க்குகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சார்ஜிங் க்ரிட்கள் நிறுவப்படும். முதல் 6 மாதங்களுக்கு அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களும் இதனை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். சென்னைக்கு பிறகு, மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் கால் பதிக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில், நாட்டின் 30 நகரங்களில் வியாபாரத்தை தொடங்கியிருக்க வேண்டும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

ஏத்தர் எஸ்340 மற்றும் எஸ்450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் சற்று அதிகம்தான் என்றாலும் கூட, அதற்கேற்ப ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏத்தர் எஸ்340 ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம். பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5.1 வினாடிகளில் எட்டும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர்கள்.

மறுபக்கம் ஏத்தர் எஸ்450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட ஏத்தர் எஸ்450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 3.9 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள்.


Click it and Unblock the Notifications








