புதிய அவதாரத்தில் பஜாஜ்: 10 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறதா பஜாஜ் ஸ்கூட்டர்??
பஜாஜ் நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்க உள்ளது. இதற்காக அர்பனைட் என்னும் துணை நிறுவனத்தையும் அது தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் எந்தவிதமான ஸ்கூட்டரை முதலில் தயாரிக்க உள்ளது என்ற தகவலை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகம் முழவதும் மாசுபடுதல் என்னும் கொடிய நோயால் சிக்கித் தவித்து வருகிறது. இதன்காரணமாக புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுசூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பூமி சந்தித்து வருகிறது. இதற்கு வளர்ந்து வரும் மக்கள் தொகை, காடுகள் அழிப்பே முக்கிய காரணமாக உள்ளன.

இதை தவிர மக்கள் பயன்படுத்தும் ஏசி, வாகனம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் வாயுக்காளாலும் காற்று கடுமையாக மாசடைகிறது. அவ்வாறு ஏற்படும் மாசு காரணமாக மக்களிடையே கொடிய வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டாலும், பலனளிக்காமல் சுற்றுச்சூழல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இவற்றில் இருந்து உடனடியாக தீர்வு காண முடியாது என்றாலும், சற்று மாசுபடுதலை தவிர்க்கும் விதமாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் உபயோகத்தை குறைத்து, ஈகோ ப்ரெண்ட்லி வாகனமான மின்சார வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி மின்சார வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் விலக்கு, டோல்கேட்களில் சாலை வரி விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு சலுகைகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பல்வேறு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளன.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் சார்பாக மின்சார வாகன தயாரிப்பு குறித்து சமீபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், துணை தலைவர் சுமீத் நரங், என்ஐடி ஆயோக்கின் சிஇஓ அமிதாப் கந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ராஜீவ் பஜாஜ், "மின்சார வாகன தயாரிப்பு துறையில் அதிக நிறுவனங்கள் களமிறங்கி உள்ளதால், கடுமையான சவால்களை பஜாஜ் எதிர்கொள்ள உள்ளது. மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை களமிறக்கும் அவசியம் உள்ளது. தற்போது இருசக்கர மின்சார வாகனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம். அது மின்சார பைக்காகவோ அல்லது ஸ்கூட்டராகவோ இருக்கலாம்," என தெரிவித்திருந்தார்.

பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தற்போது அந்நிறுவனம், பைக் மார்க்கெட்டில் மட்டுமே தீவிர கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், மின்சார வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பை முன்னிட்டு, அந்நிறுவனம் அறிவித்திருந்தபடி, தனது முதல் மின்சார ஸ்கூட்டரை 2020ஆம் ஆண்டில் வெளியிட உள்ளது.

அதற்காக பஜாஜ் நிறுவனம் அர்பனைட் என்னும் சப் பிராண்டை உருவாக்கியுள்ளது. அதன்மூலம் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜீரோ-எமிஸன் என்னும் முறையில் உருவாகும் இந்த ஸ்கூட்டரானது சுற்றுச்சூழலின் நண்பனாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ, டிவிஎஸ் ஆகியவையும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மின்சார வாகனங்களின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்க நாள் அதிகரித்து வரும் சூழலில் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








