பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் பவர்ஃபுல் அவென்ஜர் பைக்?
பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் சக்திவாய்ந்த அவென்ஜர் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. பிரிமீயம் ரக பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதன் மூலமாக பஜாஜ் பிராண்டில் பல புதிய பிரிமீயம் வகை மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும், பல்வேறு வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கு பஜாஜ் ஆட்டோவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியானது புதிய பைக் மாடல்களை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை துவங்க உள்ளன.

இன்னும் மூன்று ஆண்டுகளில் முதல் பைக் மாடலை இந்த கூட்டணி சந்தையில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியில் 500 சிசி திறன் வரையிலான பைக் மாடல்களை உருவாக்கும் திட்டம் போடப்பட்டுள்ளது.

மேலும், பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான அவென்ஜர் பைக்கின் சக்திவாய்ந்த புதிய மாடலை முதலாவதாக இந்த கூட்டணியில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பைக் 400 சிசி முதல் 500 சிசி இடையிலான ரகத்தில் இருக்கும்.

இந்த கூட்டணியில் பைக் உருவாக்கப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு உள்ளிட்டவற்றை ட்ரையம்ஃப் கையில் எடுக்கிறது. குறைவான செலவில் உற்பத்தி செய்யும் பணிகளை பஜாஜ் மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, டிவிஎஸ் மோட்டார் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் பாணியிலேயே இந்த கூட்டணி செயல்பட இருக்கிறது.

மற்றுமொரு முக்கிய விஷயம், இந்த கூட்டணியில் உருவாக்கப்படும் பைக் மாடல்கள் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஏற்கனவே, பஜாஜ் நிறுவனம் வெளிநாடுகளில் சிறந்த விற்பனையை பெற்று வருகிறது. உலக அளவில் 80 நாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

பஜாஜ் நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த பைக்குகளில் 40 சதவீதம் வெளிநாடுகளுக்குத்தான் செல்கிறது. உள்நாட்டு விற்பனை என்பது 60 சதவீதமாக உள்ளது. இதனால், தற்சமயம் நிலவும் மந்தநிலையால் பஜாஜ் ஆட்டோ பெரிய அளவில் பாதிக்கவில்லை.

மேலும், ட்ரையம்ஃப் கூட்டணியை வைத்து பல்வேறு புதிய நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்புகளை இரு நிறுவனங்களும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பஜாஜ் நிறுவனம் கேடிஎம் பிராண்டை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட நிலையில், அடுத்து ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இவை கேடிஎம் பைக்குகளின் அடிப்படையில் டிசைனில் மட்டும் வேறுபடும். ஹஸ்க்வர்னா மாடல்களுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. அடுத்த ஆண்டு ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
Via - Rushlane


Click it and Unblock the Notifications








