பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி!
பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் தயாரிக்கப்படும் புதிய பைக் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனமும், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் கூட்டணி அமைத்து நடுத்தர வகை பிரிமீயம் பைக்குகள் ஈடுபட முடிவு செய்துள்ளன. அடுத்த ஆண்டு இதற்கான முறைப்படியான ஒப்பந்தம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எந்தெந்த மாதிரியான பைக் மாடல்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல்களும் அப்போது முறைப்படி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், ட்ரையம்ஃப் கூட்டணியில் உருவாக்கப்படும் புதிய பைக் மாடல்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டணியின் சார்பில் 400 சிசி முதல் 800 சிசி வரையிலான ரகத்தில் புதிய பிரிமீயம் பைக் மாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளுக்கு எதிராகவும் இருக்கும்.
புதிய பைக்குகளுக்கான தொழில்நுட்பத்தை இரு நிறுவனங்களும் இணைந்து பகிர்ந்து கொண்டு உருவாக்கும் என்பதுடன், பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான சகன் ஆலையில் இந்த புதிய பைக் மாடல்கள் உற்பத்தி செய்யப்படும்.

ஏற்கனவே, டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணி அமைத்து பைக்குகளை உருவாக்கி வெளியிட்டது போன்றே, இந்த புதிய கூட்டணியும் செயல்படும். இதனால், இரு நிறுவனங்களும் பயன்பெறும். பல்வேறு வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கு இந்த கூட்டணி மூலமாக இரு நிறுவனங்களும் பயன்பெறும்.
இதனிடையே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பைக் மாடல்களை அறிமுகப்படுத்தும் பணிகளிலும் பஜாஜ் ஆட்டோ ஈடுபட்டுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகளின் எஞ்சினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படுகின்றன. மேலும், ஹஸ்க்வர்னா பிராண்டில் புதிய பைக் மாடல்களும் அறிமுகப்படுத்துவதிலும் பஜாஜ் ஆட்டோ கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








