பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக்கின் சோதனை ஓட்டம் துவங்கியது
பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணியில் உருவான முதல் பைக்கின் சோதனை ஓட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நம் நாட்டின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் இணைந்து புதிய பைக் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், விரைவில் இரு நிறுவனங்களும் இறுதி ஒப்பந்தம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளன.

எப்படி பிஎம்டபிள்யூ மோட்டோராட் - டிவிஎஸ் கூட்டணி செயல்படுகிறதோ, அதே பாணியில் சில வேறுபாடுகளுடன் வர்த்தக திட்டத்தை இந்த கூட்டணி முன்னெடுத்து செல்ல இருக்கின்றன. இந்த கூட்டணியில் 300 சிசி முதல் 750சிசி வரையிலான நடுத்தர எடை பிரிவு இருசக்கர வாகனங்களை உருவாக்கப்பட உள்ளன.

புதிய பைக்குகளின் உருவாக்கப் பணிகளில் பெரும்பாலானவற்றை ட்ரையம்ஃப் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. உற்பத்தி செய்யும் பொறுப்பை பஜாஜ் ஆட்டோ ஏற்க இருக்கிறது. இந்த கூட்டணியில் உருவாகும் பைக்குகள் இரு பிராண்டுகளிலும் விற்பனைக்கு செல்லும்.

வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. ஏற்கனவே டீலர் கட்டமைப்புள்ள நாடுகளில் பஜாஜ் மற்றும் ட்ரையம்ஃப் நிறுவனங்கள் இந்த புதிய நடுத்தர வகை பைக்குகளை களமிறக்க திட்டமிட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன் இங்கிலாந்திலுள்ள ட்ரையம்ஃப் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் புதிய பைக்குகள் உருவாக்கப் பணிகளை பார்வையிட சென்றிருந்தார். அப்போது, புதிய பைக்குகளை அவர் பார்வையிட்டுள்ளார். இதில் முதல் பைக்கின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் புரோட்டோடைப் மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் ஆய்வுப் பணிகள் நடந்து வருவது தெரிய வந்துள்ளது. பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் வரும் சில புதிய பைக்குகள் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறிவைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த கூட்டணியின் மூலமாக இரு நிறுவனங்களும் பயன் பெறும். புதிய பைக்குகள் உருவாக்கத்திற்கான முதலீடு பெருமளவு குறைந்து லாபமும் இரு நிறுவனங்களுக்கும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த கூட்டணியின் முதல் பைக் மாடல்கள் 2021ம் ஆண்டு இறுதியில் அல்லது 2022ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது.
Source: Economic Times


Click it and Unblock the Notifications








