பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!
பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி விபரம் தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஒரு நேரத்தில் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பின்னர் பைக் சந்தையில் முழு கவனத்தையும் செலுத்தத் துவங்கியது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்த நிலையிலும் ஸ்கூட்டர் மார்க்கெட் பக்கம் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை.
இந்த நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை மனதில் வைத்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. அர்பனைட் என்ற பெயரில் குறிப்பிடப்படும், இந்த ஸ்கூட்டர் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வரும் 16ந் தேதி புதிய பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கருதப்படுகிறது. வரும் 16ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்காக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. இது பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விழாவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
வெஸ்பா ஸ்கூட்டர்களை போலவே, பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட் ஹவுசிங் அமைப்பு, எல்இடி விளக்குகள், வலிமையான பாடி பேனல்கள் ஆகியவற்றை ஸ்பை படங்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஸ்கூட்டரின் பின்புற சக்கரத்தின் ஹப்பில் மின் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். மின் மோட்டாரிலிருந்து சக்தி நேரடியாக பின்சக்கரத்திற்கு செலுத்தப்படும் வகையில் டைரக்ட் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கிறது.
இந்த ஸ்கூட்டர் பற்றிய தொாழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இதன் டிசி மோட்டார் அதிகபட்சமாக 10 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு இணையான திறனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்படும் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது அதிகபட்சமாக 100 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கும். மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்திற்கு இணையான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.
இதுவரை வெளியான ஸ்பை படங்களின்படி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலாய் வீல்கள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதி மற்றும் யுஎஸ்பி சார்ஜர் வசதிகளை பெற்றிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டருக்காக விசேஷமான மொபைல் அப்ளிகேஷனையும் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர் பிரிமீயம் அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது. எனவே, விலை ரூ.1 லட்சத்தையொட்டி நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. வரும் 16ந் தேதி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று இப்போதே ஆட்டோமொபைல் துறையினருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
Image Courtesy: Rushlane


Click it and Unblock the Notifications








