பெனெல்லி 300சிசி பைக்குகளின் விலை ரூ.60,000 வரை அதிரடி குறைப்பு!
பெனெல்லி 300சிசி பைக் மாடல்களின் விலை ரூ.60,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமீயம் ரக பைக் மார்க்கெட்டில் பெனெல்லி பைக் மாடல்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஆரம்ப நிலை மாடல்களான பெனெல்லி 300 மற்றும் 302 ஆர் ஆகிய இரு பைக் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்தநிலையில், இந்த இரண்டு பைக் மாடல்களின் விலையும் தடாலடியாக ரூ.60,000 வரை குறைத்து அறிவித்திருக்கிறது பெனெல்லி. உற்பத்தி செலவீனம் குறைந்துள்ளதால், அந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் இந்த விலை குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக காரணம் தெரிவித்துள்ளது.

பெனெல்லி டிஎன்டி300 பைக்கின் விலை ரூ.51,000, டிஎன்டி 302ஆர் பைக்கின் விலை ரூ.60,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, இதுவரை ரூ.3.50 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் ரூ.2.99 லட்சத்திலும், ரூ.3.70 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெனெல்லி 302ஆர் பைக் ரூ.3.10 லட்சத்திலும் கிடைக்கும்.

ஏப்ரல் 21ந் தேதி முதலே இந்த விலை அமலுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவாஸாகி 300 பைக்கிற்கு கடும் போட்டியாக இருக்கும். பெனெல்லியின் பிற மாடல்களின் விலையில் மாற்றம் இல்லை. பெனெல்லி டிஎன்டி600ஐ பைக் ரூ.6.20 லட்சத்திலும், பெனெல்லி டிஆர்கே502 பைக் ரூ.5.10 லட்சத்திலும், டிஆர்டி502எக்ஸ் மாடல் ரூ.5.50 லட்சத்திலும் கிடைக்கும்.

பெனெல்லி டிஎன்டி300 பைக்கில் இரண்டு சிலிண்டர் அமைப்புடைய 300சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 36.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 302ஆர் பைக்கிலும் இதே எஞ்சின்தான் உள்ளது.

இத்தாலி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஆலையில் பெனெல்லி பைக் மாடல்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. தற்போது உற்பத்தி செலவீனம் மிக கணிசமாக குறைந்துள்ளதே, 300சிசி மாடல்களின் விலை குறைப்புக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபாக் கூறுகையில்,"பெனெல்லி பிராண்டு கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்ததாக வாடிக்கையாளர் மத்தியில் மாறும் என்று நம்புகிறோம். டிஎன்டி300 மற்றும் 300ஆர் ஆகிய இரு பைக் மாடல்களின் உற்பத்தி செலவீனம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.

ஏற்கனவே டிஎஸ்கே குழுமத்துடன் இந்தியாவில் வர்த்தகம் செய்து வந்தது பெனெல்லி. டிஎஸ்கே குழுமம் நிதி மோசடியில் சிக்கியதையடுத்து, அந்த நிறுவனத்துடனான உறவை முறித்துக் கொண்டு இந்தியாவில் பைக் வர்த்தகத்தையும் தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது மஹாவீர் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்தின் கூட்டணியில் பைக் வர்த்தகத்தை மீண்டும் துவங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








