ஜீரோ பர்சன்ட் வட்டியை அறிவித்த பெனெல்லி: கலக்கத்தில் ஆழ்ந்த போட்டி நிறுவனங்கள்...!
பெனெல்லி நிறுவனம் டிஎன்டி300 மற்றும் 302ஆர் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள்களை ஜீரோ பர்சன்ட் வட்டியில் விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இத்தாலியை மையமாகக் கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதன் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றது. அந்த வகையில், பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் உள்ள மஹாவீர் குழுமத்துடன் இணைந்து தனது மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் முன்னதாக டிஎஸ்கே குழுமத்துடன் கூட்டாளியாக இருந்து வந்தது. நிதிநெருக்கடி உள்ளிட்ட சில காரணத்தால், அந்த நிறுவனத்துடனான கூட்டணியை விட்டு பெனெல்லி வெளியேறியது. இந்த நிலையில்தான், சில மாதங்களுக்கு முன்பு ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்துடன் பெனெல்லி இணைந்தது.

ஆதீஷ்வர் நிறுவனமானது ஹைதராபாத்தைச் சேர்ந்த மஹாவீர் குழுமத்தின் அங்கமாகும். இந்த நிறுவனம் ஏற்கனவே, மெர்சிடிஸ் பென்ஸ், இசூசு, ஸ்கோடா, சுஸூக்கி, இந்தியன் உள்ளிட்ட பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் டீலர்ஷிப்பினைப் பெற்றுள்ளது. இத்துடன் பெனல்லி நிறுவனமும் மஹாவீர் குழுமத்துடன் இணைந்து தனது புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது.

அந்த வகையில், மல்டி சிலிண்டர் எஞ்ஜினை உடைய 300சிசி முதல் 1,199சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை பெனெல்லி இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அவ்வாறு, அண்மையில் பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் மற்றும் டிஆர்கே502எக்ஸ் ஆகிய இரண்டு மாடல் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், டிஆர்கே-502 அட்வென்ச்சர் மாடல் பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பெனெல்லி நிறுவனம், விற்பனையை அதிகரிக்கும் விதமாக வட்டியில்லா விற்பனை என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, டிஎன்டி300 மற்றும் 302ஆர் ஆகிய பைக்குகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. இதற்காக பெனெல்லி நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள அனைத்து பெனெல்லி ஷோ-ரூம்களிலும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, மோட்டார் சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 80 சதவீதம் வரை வாடிக்கயாளர்களுக்கு கடன் வழங்கப்படும். ஆனால், இந்த கடன் முறையானது நீண்ட நாள் பாலிசியாக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், முதல் 12 மாதங்களுக்கு மட்டுமே வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து வரும் மாதங்களுக்கு குறைந்தபட்ச வட்டி விதிக்கப்பட உள்ளது.

பெனெல்லியின் டிஎன்டி 300 அல்லது டிஎன்டி 302ஆர் பைக்கை வாங்கு வாடிக்கையாளர்கள், நான்கு வருட இஎம்ஐ பிளானை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்த பிளானில் முதல் 12 மாதங்களுக்கு வட்டி தொகையைக் கட்ட தேவையில்லை. மாறாக பைக்கிற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதையடுத்து வரும் மாதங்களுக்கு, அதாவது இரண்டாம் ஆண்டு முதல் 2.5 பர்சன்ட் என்ற வட்டி விதிக்கப்படுகிறது. தொடர்ந்து, மூன்றாம் ஆண்டிற்கு 3.5 பர்சன்ட் வட்டியும், நான்காம் ஆண்டிற்கு 4.5 பர்சன்ட் என்ற வட்டியும் வசூலிக்கப்படும். இந்த சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் 20 ஆயிரம் வரை சேமிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிளிலும் ஒரே எஞ்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, டிஎன்டி300 மற்றும் 302ஆர் மோட்டார் சைக்கிளில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 300சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 38.26 பிஎச்பி பவரையும், 26.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு உள்ளது.

பெனெல்லி டிஎன்டி 300 பைக் சென்னையில் ரூ. 4 லட்சம் முதல் 4.50 லட்சம் என்ற ஆனரோட் விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. அதேபோன்று, டிஎன்டி 302ஆர் பைக்கானது ரூ. 4.50 லட்சம் முதல் 4.70 லட்சம் என்ற ஆன்ரோட் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் வட்டியில்லா கடன் சலுகையானது வருகின்ற ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








