ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியான மாடலை களமிறக்கும் பெனெல்லி!
பெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் க்ரூஸர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை காணலாம்.

ராயல் என்ஃபீல்டு 350சிசி மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறிவைத்து பல்வேறு க்ரூஸர் பைக் மாடல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பெனெல்லி நிறுவனமும் புத்தம் புதிய மாடலை இந்த சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ராயல் ன்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மற்றும் க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களின் சந்தையை குறிவைத்து அதற்கு இணையான அம்சஙகள் கொண்டதாக பெனெல்லி பைக் வர இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள இம்பீரியல் க்ரூஸர் பைக்கையே பெனெல்லி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஆட்டோமொபைல் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தி இந்து பத்திரிக்கைக்கு பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபாக் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இம்பீரியல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறி இருக்கிறார்.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் மாடலானது பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்ட க்ரூஸர் பைக் மாடலாக இருக்கும். அதேநேரத்தில், பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

இந்த பைக்கில் 373சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.7 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

இந்தியாவிலேயே இந்த புதிய பைக் மாடலை முழுமையாக உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். எனவே, விலை மிக சவாலாக இருக்கும் என்று விகாஸ் ஜபாக் தெரிவித்துள்ளார். எனவே, இது நிச்சயம் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்களின் மார்க்கெட்டை அசைத்து பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

"தற்போது உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் கூட்டணி நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறோம். எதிர்காலத்தில் இந்தியாவிலேயே பைக்குகளை முழுமையயாக உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்றும் தெரிவித்துள்ளார்.
Source: The Hindu


Click it and Unblock the Notifications








