ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக 400 சிசி க்ரூஸர் பைக்கை களமிறக்கும் பெனெல்லி!
விலை குறைவான மூன்று புதிய பைக் மாடல்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு பெனெல்லி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் சந்தையை பல பைக் தயாரிப்பு நிறுவனங்கள் குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இதுவரையில் வந்த மாடல்களிலேயே ஜாவா மட்டும்தான் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேர் எதிரான மாடலாக வாடிக்கையாளர் மத்தியில் கருத்து நிலவுகிறது. பிற நிறுவனங்களின் மாடல்கள் எடுபடவில்லை.

இந்தநிலையில், இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கி படு மும்முரமாக வர்த்தக விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறது இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம். சீனாவை சேர்ந்த கியாங் ஜியாங் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெனெல்லி இந்திய மார்க்க்கெட்டில் பல புதிய ஆரம்ப மற்றும் நடுத்தர வகை பிரிமீயம் பைக் மாடல்களை களமிறக்க உள்ளது.

அதன்படி, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் சந்தையை குறிவைத்து புத்தம் புதிய 400 சிசி பைக் மாடலை களமிறக்க பெனெல்லி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலை ரூ.2 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் பெனெல்லி முடிவு செய்துள்ளது.

அண்மையில் புனேயில் உள்ள அராய் வாகன சோதனை மையத்தில் பெனெல்லி நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் பைக் மாடல் ஒன்று இருப்பது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின. அதாவது, பெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 பைக் மாடல்தான் அது என்பது உறுதியானது.

ராயல் என்ஃபீல்டு, ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியான டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கும். இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.7 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக நடுத்தர ரேஞ்சில் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்கும் விதத்தில் இந்த எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

இம்பீரியல் 400 பைக் தவிர்த்து, இரண்டு புதிய 250 சிசி பைக் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு பைக் மாடல்களும் ரூ.2.5 லட்சத்தையொட்டிய விலையில் வரும் என்று பெனெல்லி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று புதிய பைக் மாடல்களுடன் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பெனெல்லி நிறுவனம் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








