எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி வந்தவரை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்த போலீசார்!
எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்தவருக்கு ஹெல்மெட் போடவில்லை என கூறி போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக கடுமையான போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 1 முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கணிசமான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கைமேல் பலனாக, பல நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்து இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் போலீசார் செய்யும் சில அடாவடி விஷயங்களால் வாகனங்களில் வருவோரின் உயிரையும் பறிக்கும் விபரீதங்களும் நடந்து வருகின்றன.

மறுபுறத்தில் சில காமெடிகளுடன் அரங்கேறி வருகின்றன. கார், மினி லோடு வேன்களில் வரும் டிரைவர்களுக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதித்த செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக, ஒருவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு கார் ஓட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சூழலில், கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு பகுதியில் நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அடுத்த சேத்தியாத் தோப்பில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக இளைஞர் ஒருவர் எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளிக் கொண்டு வந்துள்ளார். அவரை நிறுத்திய போலீசார், ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்ததாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அங்கிருந்த ஏட்டு உள்ளிட்ட பிற போலீசாரிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்களிடமிருந்து உரிய பதில் இல்லாமல் வெறுத்துப் போய்விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பத்திரிக்கையாளர்கள் சிலர் சேத்தியாத் தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாஸிடமும் கேட்டுள்ளனர். மேல் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க இயலாது என்று கைவிரித்துவிட்டார்.

எஞ்சின் இருந்தால்தான் அதன் மீது மோட்டார் வாகனச் சட்டம் செல்லுபடியாகும். ஆனால், எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்று கொண்டிருந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் போலீசார் மீது இருக்கும் மாண்பையும், மதிப்பையும் குறைத்துவிடும் வகையிலேயே உள்ளது. வாகனத் தணிக்கை குறித்து போலீசாருக்கு முறையான அறிவுறுத்தல்கள், வழிகாட்டு முறைகள் கொடுக்கப்படும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக உள்ளது.
Via - Polimer TV


Click it and Unblock the Notifications








