புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
புதிய மாடல் பஜாஜ் பல்சர் பைக்குகள் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்து தங்களது தயாரிப்புகளை தற்போது வேக வேகமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டும் உள்ளதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது பரபரப்பாக இயங்கி கொண்டுள்ளன. இந்தியாவில் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை, தங்கள் தயாரிப்புகளை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் விஷயத்தில், கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வருகின்றன.

இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் ஒன்று. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தனது உள்நாட்டு லைன்அப்பை பிஎஸ்-6 இன்ஜின்களுடன் அப்டேட் செய்யும் பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக 2020 அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் 160 4வி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

இந்த மோட்டார்சைக்கிள்களில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக இந்தியாவை சேர்ந்த மற்றொரு முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவும் வெகு விரைவில் பிஎஸ்-6 பல்சர் வரிசை பைக்குகளை உள்நாட்டு மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்சர் வரிசை பைக்குகளை பொறுத்தவரை, 150 சிசி வெர்ஷன்தான் மிக நீண்ட காலமாக அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக உள்ளது. இந்த சூழலில் சிறிய 125 சிசி வெர்ஷனின் வருகை விற்பனை எண்ணிக்கையை கூட்டுவதற்கு உதவி செய்துள்ளது. ஆனால் 150 சிசி வெர்ஷனின் விற்பனை எண்ணிக்கையை 125 சிசி வெர்ஷன் சாப்பிட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த இரண்டு பைக்குகளிலும் ஏறக்குறைய வசதிகள் ஒன்றுபோலவே உள்ளன. ஆனால் 125 சிசி வெர்ஷனின் விலை குறைவு. எனவே வாடிக்கையாளர்கள் 125 சிசி வெர்ஷனை விரும்புவதாக கூறப்படுகிறது. பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகள், பல்சர் 180 மற்றும் பல்சர் 220 ஆகிய மாடல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன.

பஜாஜ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் பல்சர் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தியிருந்தது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக அப்போது விலை உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களின் விலை மீண்டும் ஒரு முறை உயரவுள்ளது.

பிஎஸ்-6 இன்ஜின் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வை தவிர்க்க விரும்புபவர்கள் தற்போதே பிஎஸ்-4 மாடல்களை வாங்கி கொள்ளலாம். பல்சர் 125, பல்சர் 150, பல்சர் 180 மற்றும் பல்சர் 220 ஆகிய மாடல்கள், ப்யூயல் இன்ஜெக்ஸன் இன்ஜின்களை பெறலாம். அதே சமயம் அவற்றின் பவர் மற்றும் டார்க் சற்றே குறையலாம்.

அதே சமயம் விலை உயர்விற்கு ஏற்ப ஒரு சில புதிய வசதிகள் கொடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் பிஎஸ்-6 பல்சர் வரிசை மாடல்களுக்கு காத்திருக்க போகிறீர்களா? அல்லது விலை உயர்வை தவிர்க்கும் வகையில் தற்போதே பிஎஸ்-4 மாடல்களை வாங்க போகிறீர்களா? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








