ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!
ஜாவா பைக்கை முன்பதிவு செய்து மிக மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர் ஒருவர் டெலிவிரி பெற்றிருக்கிறார். இது வாடிக்கையாளர் மத்தியில் ஒருபுறம் மகிழ்ச்சியையும், முன்பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்போருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஜாவா பிரியர்கள் இந்த பைக்குகளை அடித்து பிடித்து முன்பதிவு செய்தனர். எப்படியும் சில மாதங்களில் பைக் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் முன்பதிவு செய்தனர்.

ஆனால், வினியோகப் பணிகள் பல மாதங்கள் கழித்து ஒருவழியாக துவங்கினாலும், சொற்ப எண்ணிக்கையிலியே டெலிவிரி கொடுக்கப்படுகின்றன. இதனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பொறுமையிழக்கும் நிலை ஏற்பட்டு சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

ஆனால், முன்பதிவு செய்து சிலர் 11 மாதங்களாக காத்துக்கிடக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை ஜாவா நிறுவனம் கடுமையாக சோதித்து வருகிறது. சிலர் முன்பதிவை ரத்து செய்துவிட்டு, பிற நிறுவனங்கள் பக்கம் திரும்பினர்.

இந்த நிலையில், சண்டிகர் நகரை சேர்ந்த ஜஸ்மித் சிங் என்ற வாடிக்கையாளர் முன்பதிவு செய்து 16 நாட்களில் ஜாவா 42 பைக்கை டெலிவிரி பெற்றிருப்பதாக அவர் ஜாவா உரிமையாளர் குழுவினருக்கான சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாலும், கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நெருங்கும் வரையில் பொறுமையுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாவது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவுகள் வரிசை கிரமமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஜாவா பைக்குகள் டெலிவிரி கொடுக்கப்பட்டு வருகின்றன. டீலர்களில் முறைகேடுகளை தவிர்க்க, இதற்காக பிரத்யேக இணையதளத்தை ஜாவா பயன்படுத்தி வருகிறது.

ஆனால், ஜஸ்மித் சிங் எவ்வாறு ஜாவா 42 பைக்கை வெறும் 16 நாட்களில் டெலிவிரி பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஆன்லைன் முன்பதிவு வரிசையை கடந்து எவ்வாறு டெலிவிரி பெற்றார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

அது அவருக்கும் தெரியவில்லை என்றே தெரிகிறது. கடந்த 6ந் தேதி புக்கிங் செய்த அவருக்கு நேற்று டெலிவிரி கிடைத்துள்ளதாக அவரது பதிவு தெரிவிக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் டெலிவிரி கிடைக்கும் என்று ஆன்லைன் தளத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சொற்ப நாட்களில் டெலிவிரி பெற்றிருப்பது அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜாவா 42 பைக்கின் பச்சை வண்ணத்திலான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலை அவர் வாங்கி இருக்கிறார். இந்த பைக்குடன் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜாவா பைக்கின் காத்திருப்பு காலம் குறைந்துள்ளதாக என்ற கோணத்திலும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் குழப்பத்துடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை ஜாவா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை.

கடந்த 11 ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி வந்தேன். இது நிச்சயம் மதிப்பு வாய்ந்த பைக் என்று ஜாவா 42 பைக்கை அவர் பாராட்டி பதிவு செய்துள்ளார். அவர் பைக்கை டெலிவிரி பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த பைக்கில் 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஜாவா 42 பைக் ரூ.1.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








