மொத்தமாக சுருட்டப்படும் வாடிக்கையாளர்கள் பணம்... வாகன டீலர்ஷிப்களில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்...
வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவதற்காக, வாகன டீலர்ஷிப்களில் நடைபெற்று வரும் மெகா மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் உள்ள செக்டார் 8 பகுதியில், ஜோஷி ஆட்டோ ஸ்கேன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஆகும்.

இங்கு கர்னல் பகுதியை சேர்ந்த ஸ்மஜ்பால் சிங் என்பவர், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதியன்று, ஹோண்டா ஆக்டிவா 4ஜி (Honda Activa 4G) ஸ்கூட்டரை வாங்கினார். அப்போது ஸ்கூட்டருக்கான விலையுடன், சேர்த்து பதிவு கட்டணத்தையும் (Registration Amount) அவர் செலுத்தினார்.

அதாவது பதிவு கட்டணமாக 300 ரூபாய், தற்காலிக பதிவு கட்டணமாக 150 ரூபாய், தபால் கட்டணமாக 30 ரூபாய், ஸ்மார்ட் கார்டு கட்டணமாக 200 ரூபாய், மோட்டார் வாகன வரியாக (MV Tax- Motor Vehicle Tax) 2,050 ரூபாய் என மொத்தம் 2,730 ரூபாய் வந்தது.

ஆனால் டீலர்ஷிப்பில் 3,209 ரூபாய் வசூலித்தனர். அதாவது 479 ரூபாய் அதிகமாக வசூல் செய்யப்பட்டது. இந்த 479 ரூபாய் எதற்காக என ஸ்மஜ்பால் சிங் கேள்வி எழுப்பினார். ஆனால் டீலர்ஷிப்பில் இருந்து உரிய விளக்கம் எதுவும் தரப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்து போலீசாரிடம் ஸ்மஜ்பால் சிங் உடனடியாக புகார் அளித்தார். ஸ்மஜ்பால் சிங் அத்துடன் விட்டு விடவில்லை. பஞ்ச்குலா மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தையும் அவர் உடனடியாக அணுகினார்.

ஸ்மஜ்பால் சிங்கின் புகாரை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், சம்பந்தப்பட்ட நபர்களை ஆஜராக உத்தரவிட்டது. இதன் பேரில் ஆஜரான பிரதிநிதிகள், சேவையில் எவ்வித குறைபாடும் நேரவில்லை என வாதிட்டனர். ஆனால் இதனை நுகர்வோர் குறைதீர் மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பதிவு கட்டணம் என்ற பெயரில் ரூ.479 அதிகமாக வசூல் செய்ததற்காக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்பிற்கு, நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் டீலர்ஷிப்களில், கொஞ்சம் அசந்தாலும் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே. வாகனத்திற்கான தொகை தவிர, டீலர்ஷிப்களில் பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இவற்றில் சில கட்டணங்கள் நியாயமானவைதான் என்றாலும், எஞ்சிய கட்டணங்கள் எதற்காக அதிகமாக வசூல் செய்யப்படுகின்றன? என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இருந்தபோதும் டீலர்ஷிப் பணியாளர்கள் கேட்கும் தொகையை நம்மில் பலரும் கட்டி விட்டு வந்து விடுகிறோம்.

போதிய அளவிற்கு விழிப்புணர்வு இல்லாததால், கேள்வி எழுப்பாமல் இருப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே புதிய வாகனங்களை வாங்க செல்லும் முன்பாக, கட்டணங்கள் குறித்த தெளிவான விழிப்புணர்வுடன் செல்வது சிறந்தது.

அத்துடன் புதிய வாகனங்கள் என்ற பெயரில், பழைய வாகனங்களையும், பழுதான வாகனங்களையும் வாடிக்கையாளர்களின் தலையில் கட்டும் சம்பவங்களும் அவ்வப்போது தொடர்ச்சியாக அரங்கேறி கொண்டேதான் உள்ளன.

எனவே இது போன்ற முறைகேடுகளில் ஏமாந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், புதிய வாகனங்களை வாங்க செல்லும்போது, கை தேர்ந்த மெக்கானிக்குகளை உடன் அழைத்து செல்வது நல்லது. அத்துடன் அவர் உங்கள் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தால், மோசடிகளில் இருந்து தப்பலாம்.


Click it and Unblock the Notifications








