சிட்டாக பறந்த சூப்பர் பைக்... பொறி வைத்து பிடித்த போலீஸ்... இருசக்கர வாகன ஓட்டி சிக்கியதன் பின்னணி..
சிட்டாக பறந்துச் சென்ற சூப்பர் பைக் உரிமையாளரை போலீஸார் ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு மடக்கிப்பிடித்துள்ளார். இளைஞரை மடக்கிப்பிடிக்க போலீஸார் கையாண்ட செயல்குறித்த விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.

அண்மைக் காலங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும், குறிப்பாக விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பிரிமியம் தரத்திலான பைக்குகளுடைய எண்ணிக்கை நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகின்றன.

அதிக விலைக் கொண்ட வாகனங்கள் அதீத திறனை வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டவை. இதன்காரணமாகவே, சாலையில் அத்தகைய வாகனங்கள் செல்லும்போது போலீஸார் அவற்றின்மீது தனி கவனம் செலுத்துகின்றனர்.
இதற்கு அவற்றின் அதீத திறன் மட்டுமின்றி அந்த வாகனங்களில் மேற்கொள்ளப்படும் மாடிஃபிகேஷன்களும் ஓர் காரணமாகும்.

பொதுவாக, இந்தியாவில் சந்தைக்குப் பிறகான எந்திரங்களை வாகனங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைப்பது மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆஃப்டர் மார்க்கெட் பொருள்களின் பயன்பாட்டிற்கு கெடுபிடி காட்டப்படுகின்றது.

இத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சாதனத்தைப் பயன்படுத்திய வாகனத்தைப் போலீஸார் ஒருவர் மடக்கியுள்ளார். ஆனால், அந்த வாகன ஓட்டியோ போலீஸாரைத் தாண்டி சிட்டாக பறந்துச் சென்றுள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த போக்குவரத்து அதிகாரி, சிறப்பாக செயல்பட்டு 10 நிமிடங்களிலேயே அந்த டூவிலரை மடக்கிப் பிடித்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைதான் பாராட்டதக்கதாக இருக்கின்றது.

இந்த சம்பவம், மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவை சம்பவத்திற்கு காரணமான அந்த இளைஞரே வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இருப்பினும், இது ஓர் விழிப்புணர்வு வீடியோவாக மற்றவர்களுக்கு அமையலாம் என்ற நோக்கில் அவர் வெளியிட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

சாதாரணமாகவே, அதிக விலைக் கொண்ட பைக்குகளில் இருந்து சற்று வித்தியாசமான சப்தம் வெளிவருவது வழக்கம்தான், ஆனால் ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கைப் பயன்படுத்தும் இந்த இளைஞர், அதன் சைலென்சரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். இது ஸ்டாக் சைலென்சரைக் காட்டிலும் அதிக ஒலி மாசினை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆகையால், இந்த பைக்கை நிறுத்தி ஆய்வதற்காக போலீஸார் மடக்கியுள்ளனர். ஆனால், அந்த இளைஞரோ அவரைக் கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்து அதிவேகமாகச் சென்றார். அப்போது, இளைஞரின் செயலால் அதிருப்தி அடைந்த போலீஸார், ஒயர்லெஸ் வாக்கி டாக்கி மூலம் சக போலீஸாரிடம் தகவலை பரிமாறியுள்ளார்.

மேலும், அந்த இளைஞரை அடுத்த சிக்னலிலேயே மடக்கும் விதமாக பச்சை நிறத்தில் இருந்த சிக்னலை சிவப்பு நிறத்திற்கு மாற்றி அவரை அங்கேயே மடக்கிப் பிடித்தார் அந்த போலீஸார்.
இதுகுறித்த அனைத்து காட்சிகளும் அந்த பைக்கர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதுபோன்று, ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது போலீஸார் இதுபோன்று நடவடிக்கை எடுப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியுள்ளது.
இருப்பினும், தப்பிச் சென்ற வாகன ஓட்டியை அடுத்த சிக்னலிலேயே பத்து நிமிடத்திற்கும் உள்ளாகவே மடக்கி பிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








