உலகின் அதிநவீன வசதிகொண்ட பைக் இதுதான்... பாதுகாப்பிலும் சிறந்த பைக்... சிறப்பு தகவல்!
உலகின் அதிநவீன மற்றும் பாதுகாப்பு நிறைந்த பைக்கின் புரோட்டை டைப் மாடலை டேமன் என்ற வாகன தயாரிப்பு நிறுவனம் அறிமகும் செய்துள்ளது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முக்கிய குறிக்கோளாக கொண்டு, தற்போது களமிறக்கப்படும் வாகனங்கள் இருக்கின்றன. அந்தவகையில், அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை முக்கியக் குறிக்கோளாக கொண்டதாக அவை களமிறக்கப்படுகின்றன. அதேசமயம், நமது நாட்டில் விற்பனைக்கு வரும் வாகனங்களில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, புதிய பாதுகாப்பு விதிகூட அண்மையில் உருவாக்கப்பட்டது. இது வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆகையால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாகனங்கள் சில, தற்போதே பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களாக களமிறக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக, கார்களில் ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில், மிக முக்கியமாக அனைத்து ரக வாகனங்களிலும் சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதுடன், விபத்தின்போது ஏற்படும் பேரிழப்பை தடுக்க உதவும். ஆகையால், இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கனடா நாட்டில் வேன்கூவர் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் டேமன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், உலகின் அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட பைக்கை தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

தற்போது முன்மாதிரி (Prototype) மாடலாக உருவாகியுள்ள இந்த பைக்கில், இதுவரை இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படாத சில நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் பைக்கில் இடம்பெற்றுள்ளன. அவை, இருசக்கர வாகன ஓட்டியின் பாதுகாப்பிற்கும், முக்கிய தகவலை வழங்கும் வகையில் அது அமைந்துள்ளது.

அவ்வாறு, வேரியபிள் ரைடிங் பொசிஷன் மற்றும் டிராஃபிக்-டிராக்கிங் கொள்ளிசன் அலர்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிக்கு, அவர் செல்லும் பாதையின் பாதுகாப்பு குறித்த தகவலை வழங்க உதவும். இத்துடன், புதிய திட்டமாக டேமன் நிறுவனம், அதன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பு நிறைந்த வாகனமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக, அந்த நிறுவனம் 2.5 மில்லியன் கனடியன் டாலரை முதலீடு செய்ய இருக்கின்றது. அதேசமயம், இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை தயாரித்து, மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும், வேரியபிள் ரைடிங் பொசிஷனை, வாகன ஓட்டி எலக்ட்ரானிக்கலாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அந்தவகையில், இருக்கையை ஸ்லைட் செய்து கொள்ளுதல், ஃபுட் பெக்ஸ் மற்றும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்களை மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி நகர்த்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த வசதிகளின் மூலம், வாகன ஓட்டி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, தனது பயணத்தை சொகுசாக மாற்றிக்கொள்ள, சிறிய பட்டனை அழுத்தினாலே போதும். அது, அவருக்கு தேவையான வகையில் சீட்டை அட்ஜெஸ்ட் செய்துவிடும். அதேபோன்று, ஹேண்டில் பார்களையும் அது கன்ட்ரோல் செய்துகொள்ளும். இது, வாகன ஓட்டியை சற்று ரிலேக்ஸாக பயணிக்க வழி வகை செய்யும்.

அதேபோன்று, ஃபுட் மற்றும் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துகொள்வதன்மூலம், பைக்கிற்கும், சாலைக்குமான இடைவெளி சற்று அதிகரிக்கின்றது. இதனால், அந்த பைக் கரடு முரடான சாலையில்கூட பயன்படுத்தப்படுவது எளிதாகி விடுகின்றது.

இதேபோன்று, டேமன் பைக்கில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதனை, அந்த நிறுவனம் ஏடபிள்யூஎஸ்எம் (AWSM - Advance Warning System for Motorcycles) என அழைக்கின்றது. இந்த, அம்சமானது பைக்கை ரேடார், கேமரா, சென்சார் மற்றும் நியூட்ரல் நெட் உள்ளிட்டவற்றுடன் இணைத்து கொள்ள உதவுகின்றது.

இது, பைக்கைச் சுற்றியுள்ள பகுதியை அனலைஸ் செய்து தகவலை வழங்கும். இந்த ஆய்வில், பைக் செல்லும் பாதையில் ஏதேனும் விபத்தோ அல்லது தடங்களோ இருந்தால் அது வாகன ஓட்டிக்கு உடனடியாக தகவலை வழங்கும். இதற்கான எச்சரிக்கை மின் விளக்கு, காக் பிட் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதிர்வுடன் கூடிய எச்சரிக்கையையும் வாகன ஓட்டிக்கு வழங்கப்படுகின்றது.

இதற்காக, பைக்கில் 5ஜி சேவை திறன் கொண்ட கனெக்ஷன் இணைக்கப்பட உள்ளது. இந்த அதிநவீன வசதி கொண்ட பைக்கின் தயாரிப்பு பணியை டேமன் நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று, பாதுகாப்பு அம்சமான ஏடபிள்யூஎஸ்எம் தொழில்நுட்பத்தை வேன்கூவர் மாகாணத்தில் உள்ள போலீஸாரின் வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








