அறிமுகத்திற்கு முன்னரே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் யமஹா இசி05 மின்சார ஸ்கூட்டர்: எப்படி தெரியுமா...?
யமஹா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய அறிமுகத்திற்கு முன்னரே, மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்தும் மின் வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. இதில், இந்தியாவும் அடங்கும். ஆனால், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா தற்போது இந்த விவகாரத்தில் சுறு சுறுப்பைக் காட்டி வருகின்றது.
இதன்காரணமாக, நாட்டில் இயங்கி வரும் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் மின் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

அந்தவகையில், இருசக்கர வாகன உலகில் மிகவும் பிரபலமான நிறுவனமாக செயல்பட்டு வரும் யமஹா நிறுவனம், அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம், தாய்வானை மையமாகக் கொண்டு இயங்கும் கோகோரோ மின்வாகன உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகின்றது.

இசி-05 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரைதான் யமஹா நிறுவனம், இந்தியாவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உள்ளது. இதற்கு டிரைவெஸி எனப்படும் ரைட் ஷேரிங் நிறுவனத்துடன் அது இணைந்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய விற்பனைக்கு அறிமுகமாவதற்கு முன்னரே மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருப்பது சிறப்பு வாய்ந்த விஷயமாக உள்ளது.

டிரைவெஸி ஓர் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் வாடகை பைக் சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வருகின்ற நவம்பர் மாதத்தில் இருந்து, பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்லது, அதற்கு முன்னதாக கூட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகை சேவையில் கால் தடம் பதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக, முதற்கட்டமாக 5 ஆயிரம் இசி-05 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்க அது முடிவு செய்துள்ளது. மேலும், நடப்பாண்டின் இறுதிக்குள் இதனை படி படியாக உயர்த்தவும்அது திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியில்தான் அது தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

டிரைவெஸி வாடகை ஸ்கூட்டர்கள் தற்போது ஓயோ ரூம்களில் வாடகைக்கு கிடைக்கின்றது. இனி புதிதாக வாடகை சேவையில் களமிறங்க உள்ள இசி-05 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதே பாணியில்தான் கிடைக்க உள்ளன.

இத்துடன், டிரைவெஸி வாடகை பைக்குகள் ஃபிரான்சிஸி நெட்வொர்க் வாயிலாகவும் கிடைத்து வருகின்றது. இது பெங்களூரு மட்டுமின்றி ஹைதரபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகர் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இவை, மேலும் பல நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோகோரோ நிறுவனம், இசி 05 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே தாய்வானில் விற்பனைச் செய்துவருகின்றது. இந்த ஸ்கூட்டர் மலிவான விலையில், அதிக தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருப்பதால் நல்ல வரவேற்பைச் சந்தித்து வருகின்றது.

கோகோரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழட்டி மாட்டிக் கொள்ளும் திறன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சார்ஜில் 100 கிமீ வரை செல்லும். அதேசமயம், இதன் ஹை ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் தொழில்நுட்ப வசதிகளாக எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருடன் கூடிய டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

யமஹா இசி-05 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதன் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது வரும்காலங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








