இரண்டாம் நிலை நகரங்களில் ஷோரூம்களை திறக்கும் டுகாட்டி!
இரண்டாம் நிலை நகரங்களில் ஷோரூம்களை திறப்பதற்கு டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய பெருநகரங்களில் டுகாட்டி பிராண்டிற்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு ரகங்களில் 27 உயர்ரக பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதமாக பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

அண்மையில், தனது ஆரம்ப விலை மாடலான ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களை கூடுதல் சிறப்புகளுடன் மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், தனது பைக் மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக வர்த்தக விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் 9 டீலர்களுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூர், கொச்சி, மும்பை, புனே, ஆமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் டெல்லி- என்சிஆர் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் டுகாட்டி ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் டுகாட்டி ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செர்ஜி கெனோவாஸ் கூறுகையில்," சூப்பர் பைக் சந்தையில் விற்பனை பங்களிப்பை மட்டுமே பெறுவதை நோக்கமல்ல. முதலில் டீலர் கட்டமைப்புகளை வலுவாக்கி சிறந்த சேவையை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம்.

இந்தியாவிலேயே டுகாட்டி பைக்குகளை அசெம்பிள் செய்வதற்கு முதலீடு செய்யும் திட்டமில்லை. உற்பத்தி செலவு, உதிரிபாகங்கள் சப்ளை, தரம் உள்ளிட்டவற்றை கருதி, இறக்குமதி செய்தே பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இந்தியாவிற்கும், தாய்லாந்திற்கும் உள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் பைக்குகளை விற்பனை செய்ய முடிவதாக கருதுகிறோம். ஒருவேளை, நிலைமை மாறினால், இங்கேயே உற்பத்தி செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. உடனடியாக அசெம்பிள் பணிகளை செய்வோம்," என்று கூறி இருக்கிறார்.

பெருநகரங்களை போலவே, இரண்டாம் நிலை நகரங்களிலும் விலை உயர்ந்த பைக்குகளுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. அதனை மனதில் வைத்தே டுகாட்டி நிறுவனம் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications








