திடீரென தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டர்... இந்த வீடியோ பார்த்தால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மாட்டீர்கள்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று, சாலையில் ஓடிக்கொண்டிருக்கையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சிகரமான இந்த வீடியோ வெளியானதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவைதானா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அவை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால், உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. எலெக்ட்ரிக் வாகனங்களில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் மொத்த தூரம் (ரேஞ்ச்) குறைவாக இருப்பது, சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்து கொள்வது ஆகியவைதான் எலெக்ட்ரிக் வாகனங்களில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடுகள். எனவே இந்த குறைகளை போக்குவதற்காக சக்தி வாய்ந்த லித்தியம் இயான் பேட்டரிகளை கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் லித்தியம் இயான் பேட்டரிகள் எளிதில் தீப்பற்ற கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே லித்தியம் இயான் பேட்டரிகள் மிகவும் அபாயகரமானவைகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் ஒன்று சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கான்ஜோயூ நகரில்தான் இந்த விபரீதம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் நடுவே, அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் உடனே ஸ்கூட்டரை அப்படியே சாலையில் போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அடுத்த நொடியே அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் சுமார் 20 நிமிடங்கள் போராடிய பிறகுதான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இந்த கோர சம்பவத்தில், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து வந்தவருக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சீனாவை கடந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக சிஜிடிஎன் செய்தி வெளியிட்டுள்ளது. அதிர்ச்சிகரமான அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் சமயங்களில், பேட்டரிக்கு பவர் சப்ளையை துண்டிக்கும் விதத்தில், பாதுகாப்பு உபகரணங்களை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர். இருந்தபோதும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் உள்ளன. விலை மலிவான எலெக்ட்ரிக் வாகனங்களில் மட்டுமல்லாது, மிகவும் பாதுகாப்பானவை என கருதப்படும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களிலும் கூட இத்தகைய தீ விபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று கொண்டேதான் இருக்கின்றன.

இதற்கு லித்தியம் இயான் பேட்டரிகள்தான் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தும் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவும் கூட 2030ம் ஆண்டிற்குள், நாட்டில் இயங்கும் மொத்த வாகனங்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவங்களால், எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவைதானா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிர்காலம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








