எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் எவோக் நிறுவனம்!
சீனாவை சேர்ந்த எவோக் நிறுவனம் விரைவில் தனது எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இந்தியாவில் களமிறக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையாக இந்தியா விளங்குகிறது. இதனால், வெளிநாட்டு இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு இந்தியாவில் மெல்ல உயர்ந்து வருவதால், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகின்றன.

இந்த நிலையில், சீனாவை சேர்ந்த எவோக் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் இந்தியாவில் களமிறக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த தகவலை எவோக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நாதன் சைய் ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

தற்போது எவோக் நிறுவனம் அர்பன் எஸ் மற்றும் அர்பன் கிளாசிக் என்ற இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர, இந்தத ஆண்டு இறுதியில் 6061 என்ற பெயரிலான புதிய க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

எனினும், அந்நிறுவனத்தின் 125சிசி முதல் 150சிசி வரையிலான பெட்ரோல் பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விலை குறைவான எலெக்ட்ரிக் மாடல்களை முதலில் களமிறக்க எவோக் திட்டமிட்டுள்ளது.

சந்தையில் வலுவாக காலூன்றிய பின்னர் இந்த மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. எனவே, மேற்கண்ட மூன்று மாடல்களும் உடனடியாக வரும் வாய்ப்பு இல்லை.

இந்தியாவிலேயே தனது எலெக்ட்ரிக் பைக் மாடல்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கு எவோக் திட்டமிட்டுள்ளது. முக்கிய உதிரிபாகங்களை மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்துகொண்டு, 70 சதவீத உதிரிபாகங்களை உள்ளூர் சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கு முடிவு செய்துள்ளது.

பேட்டரி, மின்மோட்டார், டிரான்ஸ்மிஷன் பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும். பிற உதிரிபாகங்கள் உள்ளூர் சப்ளையர்களிடமிருந்து பெறப்படும். அதேபோன்று, இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எலெக்ட்ரிக் பைக் மாடல்களை ஏற்றுமதி செய்யும் திட்டமும் அந்நிறுவனத்திடம் உள்ளது.

அண்மையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஃபேம் திட்டமானது மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டமாக கருதப்படுகிறது. அதேபோன்று, இந்த திட்டத்தின் கீழ் 2,700 சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எவோக் போன்றே பல மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை கூடிய விரைவில் துவங்குவதற்கான சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








