மின்சார இருசக்கர வாகனத் துறையின் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
புதிய மானியத் திட்டத்தின் கீழ், பெரும்பாலான மின்சார இருச்சக்கர வாகனங்கள் மானியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான ஆய்வு தரவுகள் வெளியாகி இருக்கின்றன.

மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதத்தில், வாடிக்கையாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் ஃபேம் என்ற மானியம் வழங்கும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அந்த திட்ட காலம் முடிவடைந்ததால், ஃபேம்-2 மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 28ந் தேதி ஃபேம் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான வாகனங்களுக்கான தகுதி மற்றும் வரையறைகளை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த 1ந் தேதி முதல் ஃபேம்-2 திட்டம் நடைமுறைக்கு வந்ததுடன், ரூ.10,000 கோடி நிதியும் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும்.

அதாவது, மானியத்தை பெறுவதற்கு பேட்டரியில் இயங்கும் பஸ், பயணிகள் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆனால், அந்த வாகனங்களின் குறைந்தபட்ச வேகம், முழுமையான சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும், எரிபொருள் கொள்திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே மானியம் வழங்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், CRISIL என்ற அமைப்பு இந்த மானியம் திட்டம் குறித்த ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கின்றன. அதாவது, ஃபேம்-2 திட்டத்தின் கீழ் பெரும்பாலான பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் மானியம் பெற இயலாத நிலை இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2015 ஏப்ரல் 1 முதல் கடந்த மார்ச் 31ந் தேதி வரை அமலில் இருந்த ஃபேம்-1 திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற வாகனங்கள் குறித்த ஆய்வில், 90 சதவீதம் மின்சார ஸ்கூட்டர்கள்தான் மானியம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், தற்போது ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 95 சதவீதத்திற்கு மேலான இருசக்கர வாகனங்கள் மானியம் பெற இயலாத நிலை உள்ளது.

கடந்த ஃபேம்-1 திட்டத்தின் கீழ் லீட் ஆசிட் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், மின்சார வாகன தொழில்நுட்பத்தை உயர்த்தும் நோக்குடன், இந்த முறை லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

ஏற்கனவே எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை பொறுத்து லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு ரூ.17,000 முதல் ரூ.22,000 வரை மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை பேட்டரியின் திறன் அடிப்படையிலும் மானியத் திட்டம் வகுப்பட்டுள்ளது. அதாவது, ரேஞ்ச் மட்டுமின்றி, ஒரு kWh திறனுக்கு ரூ.10,000 வீதம் மானியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த மானியத் திட்டத்தை பெறும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. மேலும், பழைய ஃபேம்-1 திட்டத்தைவிட ஃபேம்-2 திட்டத்தில் லித்தியம் அயான் பேட்டரி ஸ்கூட்டர்களுக்குமான மானியம் ரூ.2,000 முதல் ரூ.7,000 வரை குறைவாகவே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications