இன்னும் சற்று நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம் இதுதான்... இருக்கை நுனியில் ஜாவா ரசிகர்கள்...
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் ஜாவா தனது ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா (Jawa) மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி விரைவாக தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக காத்து கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் காத்திருப்பு அனேகமாக இன்றுடன் (மார்ச் 29) முடிவுக்கு வரலாம்.

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ரீ லான்ச் செய்யப்பட்டன. அப்போது மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு மார்ச் மாதமும் வந்தது. ஆனால் டெலிவரி தொடங்கப்படவில்லை.

2019ம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி, நடப்பு மாத 4வது வாரத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை. நேற்றைய தினம் வரை (மார்ச் 28) ஒரு வாடிக்கையாளருக்கு கூட ஜாவா பைக் டெலிவரியாகவில்லை.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் டெலிவரி தொடங்கப்படாததால், ஜாவா மோட்டார் சைக்கிள்களை புக்கிங் செய்திருந்த வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்தனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தங்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்தனர். இப்படிப்பட்ட சூழலிலும் கூட ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி எப்போது தொடங்கப்படும் என்பது உறுதியாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

ஆனால் இந்த சஸ்பென்ஸன் இன்றுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவா மோட்டார் சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், கடந்த மார்ச் 27ம் தேதியன்று (நேற்று முன் தினம்) ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓரிரு நாட்களில் டெலிவரி தொடங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

எனவே முதல் மோட்டார் சைக்கிள் இன்று டெலிவரி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இதில், சிக்னேச்சர் எடிசன் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் தொகை, உயிர் தியாகம் செய்த இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

யூ டியூப் மற்றும் பேஸ்புக்கில் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வைத்து வாடிக்கையாளர்கள் பெரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்கள் டெலிவரியும் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு மாதத்தில் டெலிவலி பெறவுள்ள வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட டீலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் டெலிவரி பெறவுள்ள வாடிக்கையாளர்களுக்கு வரும் 31ம் தேதி தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. நடப்பு மார்ச் மாதம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த மாதத்தில் எவ்வளவு மோட்டார் சைக்கிள்கள் டெலிவரி செய்யப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாவா மற்றும் ஜாவா 42 என்ற பெயர்களில் 2 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், ஜாவா பைக்கின் விலை ரூ.1.64 லட்சம். அதே சமயம் ஜாவா 42 பைக்கின் விலை ரூ.1.55 லட்சம். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இந்த விலை ரியர் ட்ரம் பிரேக் வேரியண்ட்டிற்கானது.

தற்போதைய நிலையில் இந்த பைக்குகளின் டெலிவரி மட்டுமே தொடங்கப்படவுள்ளது. ட்யூயல் ஏபிஎஸ் வேரியண்ட்களின் டெலிவரி வரும் ஜூன் மாதம்தான் தொடங்கவுள்ளது. இவ்விரு பைக்குகளும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளை குறி வைத்துள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் மாதந்தோறும் சராசரியாக 40 ஆயிரம் யூனிட் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜாவா மோட்டார் சைக்கிள்களின் அறிமுக விழாவில், ஜாவா பெராக் என்ற மூன்றாவது மோட்டார் சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டின் இறுதியில்தான் ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








